ஒப்பீட்டுக்கல்வி ஆசிரியர்களுக்கு ஏன் அவசியம்? - றாபி எஸ் மப்றாஸ்

ஒப்பீட்டுக்கல்வி ஆசிரியர்களுக்கு ஏன் அவசியம்? 

றாபி எஸ் மப்றாஸ்

வரைவிலக்கணம்
ஒப்பீட்டுக்கல்வி என்ற பதத்தை வரைவிலக்கணப்படுத்தும் போது அதில் ஒப்பீடு, கல்வி என இருபதங்கள் காணப்படுகின்றன.
ஒப்பீடு என்பது ஒன்றை இன்னொன்றுடன் தொடர்புபடுத்தி நோக்கும் செயன்முறையாகும் அதே போல் கல்வி என்பது அறிவு,திறன்,மனப்பாங்கு விருத்தியினூடாக இடம் பெறும் நிரந்தர நடத்தை மாற்றமாகும் எனச் சுருக்கமாகக் கூறலாம்.

ஒப்பீட்டுக் கல்வி தொடர்பாக அறிஞர்களின் பரந்துபட்ட வரைவிலக்கணங்களினூடாக எமது சொந்த வரைவிலக்கணத்தைக் குறிப்பிடுவது பொருத்தமானதாக அமையும். அந்த வகையில்,

'ஒப்பீட்டுக்கல்வியானது பொதுவாக வௌ;வேறு கலாசாரங்கள், பகுதிகள் அல்லது நாடுகளுக்கிடையிலான கல்வி முறைகளை மதிப்பிடுவதைக் குறிக்கின்றது.' (மைக்கல் பிரான்ஸ);

 நிக்கலஸ் ஹேன்ஸ் (1958) ' ஒப்பீட்டுக் கல்வியானது வரலாற்றுப் பின்னணியைக் கொண்ட சமய, சமூக, கலாசார, பொருளாதார, அரசியல் காரணிகளின் பகுப்பாய்வும் அவற்றுக்கான தீர்வுகளுமாகும்'

கெண்டல் ' ஒப்பீட்டுக்; கல்வி என்பது கோட்பாடுகளை அன்றி நடைமுறையில் உள்ள கல்விச் செயற்பாடுகளை ஒப்பு நோக்கும் ஓர் ஆய்வுத்துறையாகும். வெளிநாடுகளில் கல்வி முறைகளை ஆராய்வது என்பது ஒருவர் தமது தாய் நாட்டின் கல்வி முறையின் பின்புலம் அடித்தளம் என்பவற்றை பகுப்பாய்வு செய்யும் ஒரு முயற்சியாகும்.'

எனவே மேற்குறிப்பிட்ட வரைவிலக்கணங்களை மையமாகக் கொண்டு ஒரு நாட்டில் ஒரு பிரதேசத்தில் பின்பற்றப்படும் கல்வியின் நோக்கங்கள், பாடசாலை நிதி நிர்வாக முறைமைகள், கற்றல் கற்பித்தல் முறைமைகள், கலைத்திட்டம் ஆசிரியரின் வகிபங்கு, சமூகத்திற்கும் கல்விக்குமிடையிலான தொடர்பு என பல கல்விசார் துறைகளை இன்னொரு நாட்டு கல்வி முறைகளுடன் தொடர்புபடுத்தி அதன் பொருத்தப்பாடுகள் நடைமுறைச் சாத்தியம், குறை, நிறை போன்றவற்றை மதிப்பிட்டு ஆராயும் செயன்முறை ஒப்பீட்டுக்கல்வியாகும் என வரைவிலக்கணப்படுத்த முடியும்.

 ஓர் ஆசிரியர்  ஒப்பீட்டுக்கல்வியை கற்பதனூடாக பெறும் நன்மைகள் 

ஒப்பீட்டுக் கல்வியானது கல்விக் கொள்கை வகுப்பாளர்களுக்கு மிகவும் பிரயோசனமானது எனக் கூறப்பட்டாலும் எத்தகைய கல்விக் கொள்கையையும் அடிமட்டத்தில் பிரயோகிக்கும் பொறுப்பு ஆசிரியர்களையே சாரும் அந்த வகையில் ஒப்பீட்டுக்கல்வி பற்றிய தெளிவான அறிவு ஒரு ஆசிரியருக்கு மிக அவசியமாகும்.

தமது நாட்டிலும் பாடசாலையிலும் ஏன் வகுப்பறையிலும் பின்பற்றப்படும் கல்வி முறையின் நிறை குறைகளை இனங்கண்டு கொள்வதற்கு ஒரு ஆசிரியருக்கு ஒப்பீட்டுக் கல்வி உதவுகிறது.
தேசியக் கல்வி ஆணைக்குழுவினால் கொண்டு வரப்படும் கல்விக் கொள்கைகளை துல்லியமாகப் புரிந்து கொள்வதற்கும் அதனை வினைத்திறனாக நடைமுறைப்படுத்துவதற்கும் ஒரு ஆசிரியருக்கு ஒப்பீட்டுக் கல்வி பற்றிய அறிவு அவசியமாகிறது.; உதாரணமாக 5நு திட்டத்தின் தோல்விக்கு ஆசிரியர்களுக்கும் அதிபர்களுக்கும் அம்முறைமை பற்றிய தெளிவின்மையே காரணம் என ஆய்வு முடிவுகள் குறிப்பிடுகின்றது.
சமூக கலாசார வேறுபாடுகளைத் தெரிந்து கொள்ளவும் அவற்றை மதித்து அனுசரித்து நடப்பதற்கான வழிகாட்டல்களை மாணவர்களுக்கு வழங்கவும் ஒப்பீட்டுக் கல்வி உதவுகிறது. இலங்கையில் கடந்த காலங்களில் இடம்பெற்ற இனக்கலவரங்களுக்கும் முப்பது வருட யுத்தத்திற்கும் காரணங்களை அலசி ஆய்கின்ற போது இன்னும் தெளிவாக உணர முடிகின்றது. 

கலாச்சாரம், மக்கள், சமூக அமைப்பு மற்றும் தொழில்வாய்ப்புகளைப் புரிந்து கொண்டு அவற்றுக்கேற்ப மாணவர்களை பயிற்றுவிக்கவும் தன்னை சமகால உலகுக்கு ஏற்றவகையில் இற்றைப்படுத்திக் கொள்வதற்கும் ஒப்பீட்டுக் கல்வி உதவுகிறது.
மாணவர்களின் கல்வித் தேவையை சரியாக இனங்கண்டு அவற்றை பல புதிய வழிமுறைகளில் பூர்த்தி செய்வதற்கும் மேம்படுத்துவதற்கும் ஒப்பீட்டுக் கல்வி உதவுகிறது.

ஒரு நாட்டின் கல்விக் கட்டமைப்பின் முழுமையான அல்லது பகுதியான மேம்பாடுகளை அறியவும் தமது மாணவர்களுக்குப் பொருத்தமான முறையில் ஊக்கல்களை வழங்குவதற்கும்  ஒப்பீட்டுக் கல்வி உதவுகிறது
கல்விச்செயன்முறையை சர்வதேச தரத்திற்கு உயர்த்துவதற்கு ஒப்பீட்டுக் கல்வி உதவுகிறது. தொடர்பாடல் தொழிநுட்ப அறிவுகளை மையப்படுத்திய இலங்கையின் புதிய போக்குகளை இதற்கு உதாரணமாகக் குறிப்பிடலாம்.
கல்விச் சீர்திருத்த ஆலோசனைகளையும் உபாயங்களையும் பெறுவதற்கும் அதனை தமது பாடசாலையிலும் வகுப்பறையிலும் பிரயோகிப்பதற்கும் அதன் சாதக பாதகத் தன்மையை முற்கூட்டியே மதிப்பிடுவதற்கும் ஒரு ஆசிரியருக்கு ஒப்பீட்டுக் கல்வி பெரிதும் துணை புரிகிறது.

புதிய வேலைவாய்ப்புக்களை நோக்கி இளைஞர் சமுதாயத்தை நகர்த்துவதற்கு ஒப்பீட்டுக் கல்வி ஆசிரியருக்கு பெரிதும் உதவுகிறது. இத்தகைய முன்னெடுப்புக்களின் மந்த நிலைதான் இலங்கையில் சிங்கள இளைஞர்களால் முன்னெடுக்கப்பட்ட சேகுவேரா புரட்சியாகும்
ஒரு ஆசிரியருக்கு கொள்கை வகுப்புக்கும் பகுப்பாய்வுக்கும் நடைமுறைச் சாத்தியத்திற்கும் இடையிலான தொடர்பை அறிந்து கொள்ள உதவுகிறது;
பல்வேறு கல்விமுறைகளின் வெற்றி தோல்விகளை அறிந்து கொண்டு நல்ல கல்வி முறைமைகளை தமது நாட்டில் அல்லது தாம் சார்ந்த பாடசாலையில் நடைமுறைப்படுத்துவதற்கும் ஒப்பீட்டுக் கல்வி உதவுகிறது.
; கல்வி சார் துறைகளில் ஆசிரியரின் ஆய்வுத்திறனை விருத்தி செய்யவும் கல்வித்துறைக்கு சேவையாற்றவும் ஒப்பீட்டுக் கல்வி துணை செய்கிறது.கிறது
கல்வி மாற்றங்களுக்கேற்ப ஆசிரியர் மாணவர்களை அறிவூட்டுவதற்கும் சமூகத்pன் பொது அபிவிருத்திக்கும் ஒப்பீட்டுக் கல்வி உதவுகிறது.

பிள்ளையின் பூரண விருத்தியில் சூழலின் செல்வாக்கு - றாபி எஸ் மப்றாஸ்


பிள்ளையின் பூரண விருத்தியில் சூழலின் செல்வாக்கு 




றாபி எஸ் மப்றாஸ் 

பூரண விருத்தி
பொதுவாக விருத்தி என்பது மிகவும் சிக்கலடைந்ததும் பரந்த திறன்களின் தொகுதியாகவும் அமைவதனாலும் வளர்ச்சி, விருத்தி என்பன பற்றிய தெளிவின்மை காணப்படுவதாலும் பூரண விருத்தி என்ற பதத்தை இலகுவில்; வரையறை செய்திட முடியாது.
என்றாலும்> வளர்ச்சி என்பது பிள்ளை கருவுற்றது முதல் அதனது உடலியல் சார்ந்து ஏற்படக்கூடிய உயரம்> நிறை> எலும்புக் கூட்டின் நிறை, சுவாசத் தொகுதியின் பருமன் போன்ற மனித உருவின் அளவில் ஏற்படும் மாற்றமாகும் என உளவியலாளர்கள் கருதுகின்றனர்.
அதே போல்> விருத்தி என்பது பிள்ளையின் உடல்> சமூகம்> மனவெழுச்சி> அறிவு என்பவற்றில் ஏற்படும் ஒழுங்குமுறையான மாற்றம் காரணமாக பிள்ளையில் ஏற்படும் தொழிற்பாட்டு ரீதியான முன்னேற்றம் ஆகும். 
எனவே பிள்ளையின் வளர்ச்சியும் விருத்தியும் ஒன்றுக்கொன்று தொடர்புபட்டவை எனினும் வேறுபட்டவை வளர்ச்சி உடல் சார்ந்ததாக இருக்கும் அதே வேளை விருத்தி உடல்> சமூகம்> மனவெழுச்சி> அறிவு என பல விடயங்கள் சார்ந்தவை.
விருத்தி என்பது பல துறைகளை உள்ளடக்கியிருக்கிறது. அந்த வகையில் நடத்தல்> ஓடுதல்> பாய்தல் போன்ற உடல் சார்ந்த இயக்கத் திறன் விருத்தி> நினைவில் கொள்ளல்> பிரச்சினைகளைத் தீர்த்தல்> பொறிகளை> சாதனங்களைக் கையாளுதல் போன்ற அறிவு திறன் சார் விருத்தியாகும். பிறருடன் ஒத்துழைப்புடன் செயற்படுதல்> கோபம்> பயம்> வெட்கம் போன்றவற்றை அளவோடு கையாளுதல் போன்றன மனவெழுச்சி சார் விருத்திகளாகும். மேலும் பெரியோர்> ஆசிரியர்களை மதித்தல், சமூக அறவொழுக்கங்களைக் கைக்கொள்ளுதல் போன்றன ஒழுக்க விருத்தியாகும் எனவே இத்தகைய அனைத்து துறைகளிலும் ஏற்படும் நூறு வீத விருத்தியே பூரண விருத்தியாகும்.

பிள்ளை விருத்தியும் சூழலும்

ஒரு பிள்ளையின் வளர்ச்சிலும் பரம்பரைக் காரணிகளைப் போலவே சூழற்காரணிகளும் தாக்கம் செலுத்துகின்றன. அந்த வகையில்> பிள்ளை விருத்தி எனும் போது உடலில் ஏற்படும் மாற்றங்களுக்கு மேலதிகமாக அவனிடம் விருத்தியடையும் சிக்கலான திறன்களின் காரணமாக ஏற்படும் மாற்றங்கள் எனலாம். அதே போல ஒரு குழந்தை தன் தாயின் வயிற்றில் கருவுற்றது முதல் எதிர்கொள்ளும் அத்தனை நிகழ்வுகளும் சம்பவங்களும் அனுபவங்களும் அவனது சூழல் என்று வரையறுக்கலாம். ஒரு குழந்தையின் சூழலை பிரசவத்திற்கு முன்னுள்ள சூழல்> பிறப்பிற்கு பின்னுள்ள சூழல் என இருவகைப்படுத்தலாம். மேலும் சூழற்காரணிகளாக தாயின் கருவறை> குடும்பம்> சகபாடிகள்> சமூக அமைப்புக்கள், நிறுவனங்கள் என பலவற்றை அடையாளப்படுத்த முடியும். இச்சூழற்காரணிகள் அனைத்துமே பிள்ளை விருத்தியில் சாதகமான அல்லது பாதகமான வகையில் பாரிய வகிபங்கை ஆற்றுகின்றன என்பதே சமூகவியலாளர்களான போன்ற பலரது கருத்தாகும்.

1. பிள்ளையின் அறிவு திறன் விருத்தியில் பிறப்புக்கு முன்னுள்ள சூழலின் செல்வாக்கு

பிள்ளையின் கருவறைக் காலத்தில் தாயின் உடல் நலம், போஷாக்கு, மனப்பாங்கு, மனஎழுச்சிகள் பிள்ளையின் உடல் வளர்ச்சியில் சாதக பாதக தாக்கங்களைச் செலுத்துவது போலவே பிள்ளையின் அறிவு திறன் விருத்தியிலும் நன்கு தாக்கம் செலுத்துவதை அவதானிக்க முடியும். அந்த வகையில் எனது வகுப்பில் நன்றாக செயற்படும் ஓரு மாணவன் பரீட்சைகளின் போது குறைந்த புள்ளிகளைப் பெறுவதையும் மேடை நிகழ்ச்சிகளின் போது அதிக தயக்கம் காட்டுவதையும் அவதானித்து அவனது பெற்றோரை வினவிய போது அப்பிள்ளையின் தாய் அவனை கருவுற்றிருக்கும் போது ஆற்றிலே குளிக்கச் சென்று பயந்து ஏங்கிப் போனதாக தகவல் கிடைத்தது. மேலும் அத்தாயின் மற்றப் பிள்ளைக்கு இத்தகைய நிலை காணப்படவில்லை எனவே குறித்த குழந்தையின் பிரசவத்திற்கு முன்னரான நிலை அவனது திறன் விருத்தியில் பாதகமான மாற்றங்களை ஏற்படுத்தியிருப்பதைக் காணலாம். 

இஸ்ரேல் மற்றும் சில ஐரோப்பிய நாடுகளில் ஒரு தாய் கருவுற்றது முதல் அவருக்கான போஷாக்கு ஆலோசனை வழிகாட்டல் வழங்கப்படுவது போலவே நுண்ணறிவுப் பயிற்சிகள் உளவள ஆலோசனைகள் மெல்லிசையை செவிமடுக்கச் செய்தல் போன்ற வழிகாட்டல்கள் வழங்கப்படுகின்றன. மேலும் இத்தகைய பயிற்சிகள், பிறக்கும் குழந்தையை அறிவு திறன் வளர்ச்சியடைந்த பிள்ளையாக பிற்காலத்தில் அடையாளப்படுத்த முடிகிறது. எனவே இங்கு பிறப்புக்கு முன்னுள்ள சூழல் பிள்ளையில் சாதகமான மாற்றங்களை செலுத்துவதைக் காணலாம்

2.பிள்ளையின் மொழி விருத்தியில் குடும்பச் சூழலின் செல்வாக்கு

பிள்ளை பேச ஆரம்பிக்கும் போது குடும்பச் சூழலை முழுமையாக அவதானித்து பெற்றோர் உறவினர்கள் பேசுகின்ற அதே மொழி, மொழி நடை, உச்சரிப்புக்கள், கையாளப்படும் சந்தர்ப்பங்கள், அதற்கேற்ற அங்க அசைவுகளை பிள்ளையும் வெளிப்படுத்த ஆரம்பிப்பதை அவதானிக்கலாம். தீய வார்த்தைகள் பேசப்படும் ஒரு குடும்பச் சூழலில் மிக சர்வ சாதாரணமாக பிள்ளை தீய வார்த்தைகளை பேசுவதையும் கருக்குடும்பத்தில் வளரும் பிள்ளையை விட கூட்டுக் குடும்பத்தில் வளரும் பிள்ளையின் மொழி விருத்தி அதிகமாகவிருப்பதையும் பிள்ளையின் மொழி விருத்தியில் குடும்பச் சூழல் பரந்தளவில் செல்வாக்குச் செலுத்துகிறது என்பதற்கு உதாரணமாகக் கொள்ள முடியும்.

3. பிள்ளையின் ஒழுக்க விருத்தியில் சகபாடிக் குழுக்களின் செல்வாக்கு

ஒரு பிள்ளை தன் குடும்பத்தை தாண்டி அவனது சகபாடிக் குழுக்களின் விருப்பு, வெறுப்பு, பண்புகள் என அனைத்தையும் அதிகமாக உள்வாங்கிக் கொள்வதோடு தனது ஒழுக்க விருத்தியில் சாதக பாதக மாற்றங்களையும் பெற்றுக் கொள்கிறான். உதாரணமாக, ஒற்றுமையுடன் இணைந்து நடத்தல், ஆசிரியரை மதித்தல் போன்ற சாதக மாற்றங்கள் ஏற்படுவதிலும் போதைப் பொருட்களுக்கு அடிமையாதல், பகிடி வதைகளில் ஈடுபடுதல் போன்ற பாதக மாற்றங்களிலும் சகபாடிக் குழுக்களின் செல்வாக்கு இன்றியமையாதது. இதனால்தான் அனைத்து மதங்களும் நண்பனை தெரிவு செய்தல் குறித்து அதிகம் வலியுறுத்தியுள்ளன.

4. மனவெழுச்சி விருத்தியில் குடும்பச் சூழலின் செல்வாக்கு 

பிள்ளையின் பிறப்பின் பின்னரான ஆரம்ப காலப்பகுதிகளில் குடும்பச் சூழலின் செல்;வாக்கே அப்பிள்ளையில் அதிகம் தாக்கம் செலுத்துகிறது. இதனால் பெற்றோர்களுக்கிடையான சண்டை சச்சரவுகளும் பிள்ளை மீதான துன்புறுத்தல்களும் பிள்ளையின் அடிப்படைத் தேவைகளுள் சிலவான அன்பு, பாதுகாப்பு தேவைகள் இழக்கப்படுகின்ற போதிலும் பிள்ளை விரக்தியடைந்த அல்லது உணர்ச்சிவசப்படக்கூடிய அல்லது அதிகம் பயந்த சுபாவமுள்ள பிள்ளையாக மாறுவதை அவதானிக்க முடியும்.



Book Binder சலீம் - றாபி எஸ் மப்றாஸ்



*~29.03.2020 அன்று இறையடி சேர்ந்தBook Binder சலீம் அவர்களுக்காக இதயத்தின் ஆழத்திலிருந்து...*~
1920 களுக்கு முன்பே புத்தகங்களைச் செம்மையாகக் கட்டி (Binding ) காலாகாலத்துக்கும் அப்புத்தகங்களை வாழவைத்தவர்தான் (Book binder) முஹம்மது இப்றாஹிம்...
இவரது 06 பிள்ளைச் செல்வங்களில் இரு ஆண்புதல்வர்கள் மூத்தவர் சாலிஹ் (இளம்பிறை) இளையவர் சலீம் (Book binder)
தந்தை வழியில் தனையன் என புத்தகங்களைக் கட்டும் பணியை (Book binding ) பாரம்பரிய முறையில் செம்மையாகவும் செழுமையாகவும் வியாபாரமாக நோக்காது ஒரு சேவையாகவே செய்து வந்தவர்தான் Book binder சலீம்.
புத்தகங்கள் மாத்திரமல்ல புனித குர்ஆன் பிரதிகளையும் மிகவும் நேர்த்தியாக binding செய்து தருவதில் அவருக்கு நிகர் அவர்தான் அதனால்தான் ஊரிலுள்ள அத்தனை உலமாக்களுக்கும் இவர் பரிட்சயமானவர்..
கற்றறிந்த பலரிடம் கால்நடையாகவே தேடிச் சென்று அவர்களுடைய புத்தகங்களை பல போது இலவசமாகவே binding செய்து கொடுக்கும் தயாள குணம் கொண்டவர்.
பிரசவத்திற்கு இலவசம் என்பது போல் புனித நூல்களுக்கு இலவசம் என்பது இவரிடம் உள்ள எழுதப்படாத விதி...
மருதமுனை கடந்தும் பல ஊர்களிலிருந்து இக்காலத்திலும் அவரைத் தேடி வருவோர் ஏராளம்
வறுமையில் வாடிய போதும் யாரிடமும் இவர் கையேந்தியது கிடையாது.
யாரை எங்கு கண்டாலும் புன்முறுவலோடு எதிர் கொள்ளும் குணம் இவருடையது.
இறைத் தொடர்புகளில் அதிக ஆர்வம் கொண்டவர்.
"தொழும்போது அடிக்கடி மறக்குது ஹஸ்ரத்" இறுதிக் காலங்களில் அவர் என்னோடு செய்யும் கவலை நிறைந்த முறைப்பாடு இது...
இன்றோடு அன்புக்குரிய Book binder அப்பச்சி (எனது தாயின் தாய்மாமன்) அவர்கள் இறையடி சேர்ந்து பத்து நாட்கள் கடந்து செல்கின்றன.
அவன்னாரின் சுவன வாழ்வுக்காக நாம் அனைவரும் பிரார்த்திப்போம்
பதிவு
றாபி எஸ் மப்றாஸ்
07.04.2020

தொற்றிப் பரவும் கொரோனாவும் எட்டப் படாத இலங்கைக் கல்வி இலக்குகளும் - றாபி எஸ் மப்றாஸ்

தொற்றிப் பரவும் கொரோனாவும் எட்டப் படாத இலங்கைக் கல்வி இலக்குகளும்




றாபி எஸ் மப்றாஸ்

விஞ்ஞானத்தின் வேக வளர்ச்சி விண்ணையும் எட்டிப் பிடித்து விட்ட வேளையில், மருத்துவத்தின் மட்டில்லாத வளர்ச்சி மரணத்திற்கு மாத்திரம்தான் மாத்திரை கண்டுபிடிக்க வேண்டும் என மமதை கொண்டிருந்த வேளையில், உலகத்தையே அதிர்ச்சியில் உறைய வைத்து, பதற்றத்தில் பதற வைத்து, உலக வல்லரசுகளையும் ஸ்தம்பிக்கச் செய்தது ஒரே ஒரு நாமம், அதுதான் 'கொரோனா' எனப்படும் ஒரு வைரஸ்.

சீனாவில் ஆரம்பித்து மிக வேகமாக உலகின் மூலை முடுக்குகளிலெல்லாம் கொரோனா வைரஸ் (COVID-19 தாக்கியிருக்கின்றது. இலங்கையும் இதற்கு விதிவிலக்கல்ல. இன்று இலங்கை உட்பட ஏறக்குறைய அனைத்து நாடுகளும் அவற்றின் பாதுகாப்பு, மருத்துவ அதிகாரிகளின் ஒத்துழைப்போடு பொதுமக்களைக் காத்துக்கொள்ள போராடிக் கொண்டிருக்கின்றன.

அந்தவகையில், இலங்கையிலும் அடுத்தடுத்து விதிக்கப்படும் ஊரடங்கு உத்தரவுகளும் அறிவித்தல்களும் அறிவுறுத்தல்களும் சட்டதிட்டங்களும் நாட்டு மக்களுக்கு விரும்பியோ விரும்பாமலோ பல அசௌகரியங்களை ஏற்படுத்தினாலும் பாதுகாப்புக் கருதி அவற்றைப் பின்பற்ற வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். 

இந்த இக்கட்டான கால கட்டத்தில், சட்டதிட்டங்கள் தொடர்பான அலட்சியப் போக்கும் மனித விழுமியங்களை மறந்து வெறும் சுயநலப் போக்குடன் சிந்திக்கும் மனப்பாங்கும் பொதுமக்களிடையே வளர்ந்திருப்பதைக் காணலாம். குறிப்பாக இளைஞர்களின் பொறுப்புணர்வற்ற செயற்பாடுகள் குறித்து எமது நாட்டில் ஏராளமான சம்பவங்கள் பதிவாகியிருக்கின்றன. இத்தகைய நிலையில், 'நாட்டின் தற்காலக் கல்வி முறைமை மாணவர்களின் மனப்பாங்கு விருத்திக்கும் விழுமியங்களை விருத்தி செய்வதிலும் எத்தகைய வகிபங்கை ஆற்றியிருக்கின்றது?' என்பது மிகப் பெரும் வினாக்குறியாக மாறியிருக்கின்றது எனலாம்.
கொரோனா வைரசும் இலங்கை அரசும்

உலகின்  ஏறத்தாழ அனைத்து நாடுகளையும் ஆக்கிரமித்து சுமார் 30 லட்சம் லட்சத்திற்கும் மேற்பட்ட  மக்களைத் தாக்கி அதிலும் ஏறத்தாழ 2 லட்சத்திற்கும் மேற்பட்ட  மரணங்களை நிகழ்த்தியதோடு அதன் தொடர்ச்சியில் இலங்கையில் கொவிட் - 19 இனால் பாதிக்கப்பட்டோர் 500  ற்கும் மேற்பட்ட, 07 பேர் மரணத்தை எய்தியும் உள்ளனர்;(www.worldometers.info ,27.04.2020,10.40pm )

 கொரோனா பாதிப்புக்களிலிருந்து  நாட்டு மக்களைக் காத்துக் கொள்வதற்காக வரையறுக்கப்பட்ட மருத்துவ வசதிகளைக் கொண்டு அதிக பிரயத்தனங்களை அரசு மேற்கொள்கின்றது. கொவிட்-19 பரவலைத் தடுப்பதற்கான 22 அங்கத்தவர்களைக் கொண்ட தேசிய செயற்குழு அமைக்கப்பட்டிருக்கிறது. நாட்டின் குடிவரவு குடியகல்வு முற்றுமுழுதாக நிறுத்தப்பட்டுள்ளது. ஊடகங்கள், மதஸ்தலங்கள் வாயிலாக கொவிட் - 19 தொடர்பான எச்சரிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. சுமார் 45 தனிமைப்படுத்தல் நிலையங்களை அமைத்து கொரானா பாதிப்புக்குள்ளானவர்களை இனங்கண்டு கொள்ளவும் ஊரடங்கு உத்தரவுகளைப் பிறப்பித்து பாடசாலைகள் அலுவலகங்கள் வர்;த்தக நிலையங்கள் என பெரும்பாலான அரச, அரசசார்பற்ற நிறுவனங்களையும் அலுவலகங்களையும் மூடி பொதுமக்களை தமது வீடுகளில் தனிமைப்படுத்தும் முறைமையையும் இலங்கை அரசு கையாண்டு வருகிறது.(www.epid.gov.lk   ) நாட்டின் அனைத்து வகையான சுகாதார, பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் இரவு பகல் பாராது தமது பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இலங்கையில் கொரோனா வைரசும் பொதுமக்களும்
பலவிதமான ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் அரசால் மேற்கொள்ளப்பட்டாலும் பெரும்பாலான பொதுமக்கள் அவற்றை எதிர்கொள்ளும் விதம் ஆச்சரியமானது என்றே கூறலாம்.
அந்தவகையில், கொவிட் -19 தொற்றுக்குள்ளான எந்த நோயாளியையும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்படக் கூடாது என  ஒரு குழு போராட்டம் நடாத்தி அதில் 09 பேர் கைது செய்யப்பட்டனர்.(13.03.2020)
பலர் வெளிநாடுகளிலிருந்து தனிமைப்படுத்த மறுத்து அதிலிருந்து தப்பித்துக்கொள்வதற்காக பல்வேறுபட்ட வியூகங்களைக் கையாண்டு வந்தனர் இதன் காரணமாக புத்தளம் மாவட்டம் ஆரம்பத்தில் ஆபத்தான மாவட்டமாக அறிவிக்கப்பட்டது(15.03.2020)
மேலும் தன்னை தனிமைப்படுத்தாத ஒருவர் மட்டக்களப்பு நகரத்தில் இனங்காணப்பட்டார். பின்னர் இலங்கைப் பொலிஸ் தனிமைப்படுத்தல் முகாம்களுக்குச் செல்ல மறுப்பவர்களுக்கும் அதிலிருந்து தப்பிக்க முயற்சிப்பவர்களுக்கும் 06 மாத சிறைத் தண்டனையை அறிவித்து ஓரளவு கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்தனர்.(16.03.2020)

மேலும், இதாலி நாட்டிலிருந்து வந்த விடயத்தை மறைத்து நெஞ்சுவலி என றாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஒருவரால் றாகம வைத்தியசாலையில் பதற்றம் நிலவியதோடு அவரோடு தொடர்புபட்ட 15 மருத்துவ உத்தியோகத்தர்களும் சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டனர்;(20.03.2020)
அதேபோல் களுத்துறை மாவட்டத்திற்கு உட்பட்ட அட்டுளுகம பகுதியில் வெளிநாட்டிலிருந்து வந்த ஒரு நபர் மருத்துவர்களின் அறிவுறுத்தல்களையும் மீறி தனிமைப்படுத்தல் விடயத்தில் அலட்சியப்போக்காக நடந்து கொண்ட காரணத்தால் அந்த முழுப் பிரதேசமே அபாயப் பிரதேசமாக அறிவிக்கப்பட்டது.(27.03.2020)


ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட காலப்பகுதியில் இளைஞர்கள் வீதியில் கூட்டமாகக் குழுமியிருந்து பாதுகாப்பு பிரிவினரின் கடமைகளுக்கு குந்தகம் விளைவித்ததும் அரசின் அறிவித்தல்களை உதாசீனம் செய்து வந்ததோடு சட்டத்தை மீறிய குற்றத்திற்காக 40000 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதோடு ஏறத்தாழ 10000 க்கு மேற்பட்ட வாகனங்கள் பொலிஸார் வசமாக்கப்பட்டுள்ளது.( 27.04.2020)

அதுமட்டுமல்லாது ஊரடங்கு உத்தரவுகள் தளர்த்தப்பட்ட வேளைகளில், குறிப்பாக கொழும்பு, அம்பாறை,மட்டக்களப்பு,திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் பொதுமக்கள் அரசின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றாது பொருட்களை கொள்வனவு செய்வதற்காக முண்டியடித்துக் கொண்டதைக் காணமுடிந்தது. (24.03.2020) பின்னர் கொவிட் 19 அபாய பிரதேசமாக மேல்மாகாணம், யாழ்ப்பாணம் மாவட்டம் என்பன அறிவிக்கப்பட்டது. (27.03.2020)

தற்காலிகமாக மதக் கிரிகைகளுக்காக வணக்கஸ்தலங்களை மூடுமாறு அரசாங்கமும் மத தலைமையகங்களும் மத சட்ட விளக்கங்களை எடுத்துக்காட்டி பொதுமக்களை அறிவூட்டிய பின்னரும் சிலர் தொடர்ந்தும் வணக்கவழிபாடுகளில் ஈடுபட்டமைக்காக கொரொவப்பத்தானைப் பள்ளிவாயலில் வைத்து 18 பேர் கைது செய்யப்பட்டனர் (27.03.2020)

இதற்கிடையில் நாட்டின் பிரபலமான விளையாட்டு வீரர்கள், மார்க்க அறிஞர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் தாம் வெளிநாடு சென்றதை தாமாக வெளிப்படுத்தி தம்மை சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்திக் கொண்ட முன்மாதிரிகளையும் குறிப்பிட்டே ஆக வேண்டும். என்றாலும் அத்தகையவர்கள் சொற்பமானவர்களே.  

தற்காலத்தில் மாத்திரமல்ல வரலாறு நெடுகிலும் இத்தகைய விழுமியங்களை மறந்து குறுகிய மனப்பாங்குடன் சிலர் நடந்துகொண்டுள்ளனர் என்பதற்கு கடந்த கால இனக்கலவரங்களும் அத்துமீறிய போராட்டங்களும் போதைப் பொருள் கடத்தல்கள், கொலை, கொள்ளை போன்ற குற்றச் செயல்களும் சிறந்த சான்றாகும் 
இலங்கையில் பெரும்பாலானவர்கள் கற்றவர்களாகவும் அறிவுறுத்தல்களை விளங்கிக் கொள்ளக்கூடியவர்களாகவுமிருந்த போதிலும் இவ்வாறான பொதுமக்களின் அசிரத்தைப் போக்கும் சட்டங்களை உதாசீனம் செய்யும் மனப்பாங்கும் பாரதூரங்களைக் கருத்திற்கொள்ளாமையும் இளைஞர்களின் பொறுப்பற்ற செயற்பாடுகளும் இலங்கைக் கல்வி முறைமையின் வினைத்திறன் பற்றி மீள்பரிசீலனை செய்ய வேண்டியதன் அவசியத்தை உணர்த்தியிருக்கின்றன என்பது வெள்ளிடை மலை.

இலங்கையில் கல்வி வாய்ப்புக்களும் அதன் நோக்கங்களும்

கல்வி தொடர்பான வரைவிலக்கணங்கள் சிலவற்றை நோக்கும் போது கல்வியின் நோக்கங்களை சரியாக வரையறுத்துக் கொள்ள முடியும். 
'தன்னைப் பற்றிய விளக்கத்தைப் பெற்றுக்கொள்வதற்கு தேவையான அறிவை வழங்கும் செயன்முறையே கல்வியாகும்' என சோக்கிரடீஸ் குறிப்பிடுகிறார். அதாவது தனது வல்லமை, ஆற்றல், குறைபாடுகள் மற்றும் தனது செயற்பாடுகள் சரியானதா அல்லது தவறானதா என்பதைப் புரிந்து கொள்வதையே கல்வி என அவர் கருதுகின்றார். (கல்வியின் அடிப்படைகள், தொகுதி-1, இலங்கைத் திறந்த பல்கலைக்கழகம்,திருத்தியமைக்கப்பட்ட பதிப்பு,2009 பக்-05)

அதே போல் மகாத்மா காந்தி 'அறிவு(தலை),மனப்பாங்கு(இதயம்),திறன்(கை) என்பவற்றின் நிலையான விருத்தியே கல்வியாகும்' எனவே தகவல்களை சேமித்து வைத்திருப்பதால் மாத்திரம் ஒருவர் கற்றவர் எனும் அந்தஸ்தை அடைய முடியாது என்பதை காந்தி உறுதியாகக் கூறுகிறார். (கல்வியின் அடிப்படைகள், தொகுதி-1, இலங்கைத் திறந்த பல்கலைக்கழகம்,  திருத்தியமைக்கப்பட்ட பதிப்பு,2009. பக்-07)
1992 தேசிய கல்வி ஆணைக்குழுவின் முதலாவது அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள தேசிய பொதுக் கல்வியின் நோக்கங்களை பின்வருமாறு சுருக்கிக் கூற முடியும். 'கல்வியானது மனிதநேயமுள்ள நாட்டுப்பற்றுள்ள நற்பிரஜைகளான எதிர்கால சவால்களுக்கு முகம் கொடுக்கக் கூடிய நல்லாளுமைகளை உருவாக்குவதே ஆகும்'. (கல்வியின் அடிப்படைகள், தொகுதி-1, இலங்கைத் திறந்த பல்கலைக்கழகம்,  திருத்தியமைக்கப்பட்ட பதிப்பு,2009. பக்-119)

அது மாத்திரமன்றி, எமது நாட்டில் இலவசக் கல்வி, இலவசச் சீருடை, புத்தகம் என கல்வி வாய்ப்பு ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும் போது அதிகளவில் காணப்பட்ட போதிலும் நாட்டின் வளர்ந்தோர் எழுத்தறிவு வீதம் 2018ம் ஆண்டில் 91.7 (www.statistic.gov.lk )ஆக இருந்து வருகின்ற போதிலும், தற்போது 13 வருடக் கட்டாயக் கல்வித் திட்டமும் ஆரம்பத்தில் கட்டாயக் கல்வி வயதெல்லை 5 – 14 ஆகவும் என பாடசாலைக் கல்வி பல தசாப்தங்களாகக் கட்டாயப்படுத்தப்படுகின்ற போதிலும் இத்தகைய இக்கட்டான சூழ்நிலைகளின் பாரதூரங்கள் மிகத் தெளிவாக பச்சிளம் பாலகன் முதல் வயோதிபர் வரை எடுத்துரைக்கப்பட்ட போதிலும் மனித விழுமியங்களைப் பேணுகின்ற நாட்டுச் சட்டவொழுங்குகளைக் கடைப்பிடிப்பதற்கான எவ்விதப் பக்குவமும் பெரும்பாலான மக்களிடம் ஏற்படவில்லையெனில் எமது நாட்டின் கல்வி முறை அதன் நோக்கத்தை அடைவதில் இதுவரை தோற்றுப் போயிருக்கிறது என்பதே கசப்பான உண்மையாகும்.

மனப்பாங்கு மற்றும் விழுமியங்களை விருத்தி செய்வதில் இலங்கைக் கல்வி முறையின் வகிபங்கு

பெரும்பாலும், இலங்கையின் கல்விக் கொள்கைகளை தேசியக் கல்வி ஆணைக்குழுவே தீர்மானிக்கின்றது. மேலும் இலங்கையின் பாடத்திட்டங்களை வடிவமைக்கும் பொறுப்பு தேசியக் கல்வி நிறுவகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு 08 வருடத்திற்கும் நாட்டுக்கேற்ப கல்வித் திட்டங்கள் கல்வியியலாளர்களால் மீள் பரிசீலனை செய்யப்படுகின்றன. 
இலங்கையின் ஆரம்பக் கல்வி மாணவர்களுக்கு சுற்றாடல் சார் செயற்பாடுகள் பாடத்தில் 'நாம் இலங்கையர்' எனும் அலகுத் தொகுதியினூடாக இன நல்லிணக்கம், தேசப்பற்று, இன ஐக்கியம் என்பன போதிக்கப்படுவதோடு சமய பாடத்தினூடாக மனித விழுமியங்களும் அறவொழுக்கங்களும் கற்பிக்கப்படுகின்றன.
மேலும், இடைநிலை மாணவர்களுக்கு சுகாதாரம் உடற்கல்வி, வரலாறு, குடியுரிமைக் கல்வி மற்றும் சமய பாடங்களின் மூலமாக சுகாதார, நல்லிணக்க விழுமியம் சார் விடயங்கள் ஊட்டப்படுகின்றன. இவை தவிர இணைப்பாட விதான செயற்பாடுகள், விளையாட்டு நிகழ்ச்சிகள் ஊடாகவும் சட்டதிட்டங்களை மதித்தல், கட்டுப்படுதல், சகிப்புத்தன்மை, விட்டுக்கொடுப்பு போன்ற மனித விழுமியங்கள் வளர்க்கப்படுவதற்காகவே கல்வித் திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளன.
எனவே, இலங்கையின் கல்விக் கொள்கைகளும் பாடத்திட்டங்களும் பெரும்பாலும் கனகச்சிதமாகவே திட்டமிடப்படுகின்ற போதிலும் விளைவுகள் பாதமாகவே அமைகின்றன எனின், கல்வியின் உண்மையான நோக்கங்கள் இலங்கையில் நிறைவேற்றப்படாமலிருப்பதற்கு இத்தகைய கல்வித் திட்டங்களை அமுல்படுத்துவதில் உள்ள அதிகப்படியான கோளாறுகள்தான் காரணமாகும் என்ற முடிவுக்கு வரலாம்.

மனப்பாங்கு மற்றும் விழுமியங்களை விருத்தி செய்வதில் கல்வி முறையில் உள்ள குறைபாடுகளும் அவற்றை நிவர்த்தி செய்வதற்கான பிரேரணைகளும்

01. பயிற்சி பெறாத ஆசிரியர்களின் அதிகரிப்பும் ஆசிரியப் பயிற்சியின் தேவையும்
இலங்கையின் வேலையில்லாப் பிரச்சினைக்கும் நாடளாவிய ரீதியில் காணப்படும் ஆசிரியர் பற்றாக்குறைக்கும் தீர்வுகாணும் முகமாக இலங்கை அரசு பயிற்சி பெறாத பட்டதாரிகளையும் தொண்டர் ஆசிரியர்களையும் அதிகளவில் ஆசிரிய சேவைக்கு உள்வாங்குவதன் விளைவாக இலங்கைக் கல்வித் துறையில் எதிர்பார்த்த விளைவுகளை அடைவதில் பாரிய சிக்கல்கள் தோன்றியுள்ளன எனலாம். மேலும் இலங்கையின் கல்வித் திட்டங்களையும் மாணவர்களையும் உரிய முறையில் விளங்கிக் கொள்ளாதவர்களிடம் மாணவர்கள் சிக்குண்டு மாணவர் விருத்தியும் அவர்களது மனப்பாங்கு விருத்தியும் குரங்கின் கைப் பூமாலையாகப் பரிதவித்து நிற்கிறது. பயிற்றப்படாத ஆசிரியர்களிடம் மாணவர்களை ஒப்படைப்பதானது போலி வைத்தியர்களிடம் நோயாளிகளை ஒப்படைப்பதைப் போன்றது. எனவே. ஆசிரிய பயிற்சிக்குப் பின்னரே எவரும் சேவையில் இணைத்துக் கொள்ளப்பட வேண்டும். மேலும் வேலையில்லாப் பிரச்சினைக்கு கோவைகளோடு உறவாடும் எந்தத் தொழில்தானும் வழங்கப்படலாம் ஆனால் ஆசிரிய சேவை என்பது நாட்டின் எதிர்காலத்தோடு தொடர்பானது அது தானதோன்றித் தனமாக வழங்கப்பட வேண்டிய சேவை அன்று.

02. திட்டமிடலாளர்களுக்கும் அமுல்படுத்துபவர்களுக்கும் இடையில் காணப்படும் இடைவெளி

இலங்கைக் கல்விக் கொள்கைகளையும் திட்டங்களையும் வடிவமைப்பவர்கள் ஒரு குழுவினராகவும் அவற்றை நடைமுறைப்படுத்தும் அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றுமொரு குழுவினராகவும் காணப்படுவதால் சிலபோது நடைமுறைச் சாத்தியம் குறைந்த அல்லது திட்டங்கள் தொடர்பான போதியளவு அறிவு அமுலாக்கல் குழுவினருக்கு சென்றடையாத காரணங்களினால் இலங்கையின் பல கல்வித் திட்டங்கள் தோல்வியடைந்துள்ளன. விழுமிய விருத்திக்காக வடிவமைக்கப்படும் திட்டங்களை உரிய முறையில் நடைமுறைப்படுத்துவதற்கான பயிற்சி, தெளிவு ஆசிரியர்களுக்கு வழங்கப்படாமை மிக முக்கிய பிரச்சினையாகும். 
எனவே துறைசார் கல்வியியலாளர்களோடு அனுபவமும்; புலமையும் வாய்ந்த ஆசிரியர்களையும் கள ஆய்வுகளையும் முன்னிறுத்தி அத்திட்டங்கள் வடிவமைக்கப்பட வேண்டும்;. மேலும் நாட்டின் எல்லாப் பாகத்திற்கும் கல்வித்திட்டங்கள் குறித்த பயிற்சிகள் முறையாக வழங்கப்பட வேண்டும். 
03. பரீட்சை மையக் கல்வியும் மாற்றத்திற்குட்பட வேண்டிய பரீட்சை முறையும்

இலங்கைக் கல்வித் துறையின் பிரதான மதிப்பீட்டு முறைகளான தவணைப்பரீட்சைகள், கா.பொ.த சா/த, கா.பொ.த உ/த மற்றும் பல்கலைக்கழக பரீட்சைகள் என்பன பெரும்பாலும் எழுத்து மூலமானதாகவே அமைவதனால் மாணவர்களின் மனப்பாங்கும் வெறுமனே கடதாசிகளிலேயே அளவிடப்படுகின்து. இதன் விளைவாக சூழலில் எவ்வித மனப்பாங்கு மாற்றத்தையும் மாணவர்கள் காட்டுவதற்கு உந்தப்படுவதில்லை எனலாம்.
இலங்கையில் மாணவர்களின் மனப்பாங்கு திறன்களை விருத்தி செய்கின்ற வகையில் மதிப்பீட்டு முறைகள் வகுத்துக் கொடுக்கப்பட வேண்டும். குறித்த மனப்பாங்குகளை பக்கச்சார்பின்றிய நேரடி, நேரில் அவதானிப்பு முறைகள், களப்பயணம், இணைப்பாடவிதான செயற்பாடுகள் எனப் பல்வேறு விதமாகவும் மூன்றாம் நபரைக் கொண்டும் அவதானிப்புச் செய்வதன் மூலம் அம்மதிப்பீடுகள் அமையலாம். மேலும் மனப்பாங்கு மாற்றம் குறித்த பிள்ளையிடம் ஏற்படாத வரையில் அப்பிள்ளை முழுமையாகத் தேர்ச்சியடைந்தவராகக் கருதப்படமாட்டார் என்ற கொள்கை மிகக் கண்டிப்பாகப் பாடசாலை, பல்கலைக்கழகங்களில் கடைப்பிடிக்கப்பட வேண்டும்

04. அலட்சியப்படுத்தப்படும் விழுமியம்சார் பாடங்களும் மாற்றீட்டுக்கான தேவையும்

இன்று பாடசாலைகளில் சமயம், சுகாதாரம் போன்ற பாடங்கள் துறைசார் ஆசிரியர்களால் கற்பிக்கப்படுவதிலும் பார்க்க வெற்றிடம் நிரப்பும் பாடங்களாகக் கருதப்படுகின்றன. இதனால் மாணவர்கள் வெறுமனே பரீட்சைகளுக்கு மாத்திரம் படித்து சித்தி பெறக் கூடிய பாடங்களாகவும் அதிகளவு சிரத்தை எடுக்காத பாடங்களாகவும் அவை மாற்றம் பெற்றுள்ளன. 
எனவே குறிப்பாக விழுமியம் சார் பாடங்கள் தேசிய மட்டத்தில் கட்டாயப்படுத்தப்படுவதோடு அவற்றுக்கு துறைசார் ஆசிரியர்களை நியமிப்பதும் அதைக் கண்காணிப்பதும் கல்வி வலய மட்டத்தினால் வினைத்திறனாக மேற்கொள்ளப்பட வேண்டும்.

05. வளர்ந்து வரும் பணத்தை மையப்படுத்திய கல்விக் கலாச்சாரம்

அதிகளவிலான வேதனத்தைப் பெற்றுத் தரக்கூடிய பாடநெறிகளையும் பட்டப்படிப்புக்களையும் பூர்த்தி செய்வதற்காக தனியார் கல்வி நிறுவனங்களை நாடிச்செல்லும் போக்கு இன்று அதிகரித்துள்ளது. எனவே தாம் கல்விக்காக செலவு செய்தவற்றை பின்னர் எவ்வாறெனினும் சம்பாதித்துக் கொள்ள வேண்டும் என்ற ஒரே இலக்கோடு மாணவர்களும் பெற்றோர்களும் செயற்படுவதால் மனப்பாங்கு விருத்திக்கோ அல்லது விழுமியங்களைக் கடைப்பிடிக்கவோ தற்கால இளைஞர்கள் தயாரில்லை என்றே குறிப்பிட வேண்டும். 
எனவே, அரச, தனியார் பாடசாலை, கல்விநிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் அனைத்திலும் மருத்துவம், பொறியியல். கணக்கியல், என எத்துறையாகவிருந்தாலும் விழுமியம் சார் பாடங்கள் கட்டாயமாக இணைக்கப்பட  வேண்டும்.

06. சூழல் காரணிகள்

பாடசாலையில் சில பண்பாடுகளையும் விழுமியங்களையும் கற்றுச் சென்றாலும் தமது சுற்றுப்புறச் சூழலில் அதனை நடைமுறைப்படுத்துவதில் பல தடைகள் காணப்படுகின்றன. அந்த வகையில் பெற்றோரின் அசிரத்தையும் அலட்சியப் போக்கும், நாகரீகமாகக் காட்டப்படும் சினிமாக் கலாச்சாரம், சமவயதுக்குழுக்களுடனான அளவுகடந்த தொடர்பு போன்றன அத்தகைய தடைகளுள் சிலவாகும். இவற்றின் காரணமாக மாணவர்களின் மனப்பாங்கு மற்றும் விழுமிய விருத்தி சீரானதாக அமைவது சிரமசாத்தியமானதாகக் மாறியிருக்கிறது. 
எனவே, மாணவர்களுக்கு சூழல் மையக்கல்வி பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும். ஆசிரியர்களுக்கு விழுமிய பண்பாட்டு விருத்திக்கென மேலதிக நேரங்களும் அவற்றுக்கான மேலதிக வேதனங்களும் வழங்கப்பட வேண்டும். மேலும் பெற்றோர்கள் பாடசாலையுடன் நெருங்கிய தொடர்பு ஏற்படுத்துவதற்கான நடைமுறைகள் பாடசாலை மட்டத்தில் ஏற்படுத்த வேண்டும்.

முடிவுரை

எனவே, மாணவர்களினதும் இளைஞர்களினதும் மனப்பாங்குகள் விருத்தி செய்யப்படுவதற்கான திட்டங்களும் நடைமுறைகளும் மிகவும் அவசரமாக கல்வித்துறையினால் முன்னெடுக்கப்பட வேண்டும். ஏனெனில், இன்றைய கொவிட்-19 சமூகப் பிரச்சினையாக மாறியிருப்பதைப் போன்று நாளை இன்னும் ஏராளமான பிரச்சினைகளை எமது நாடு சந்திக்க நேரிடலாம். எனவே, நல்விழுமியங்கள் கொண்ட பொதுமக்கள் இனிமேலும் உருவாக்கப்படவில்லையெனில் நாளைய நாடு குழப்பங்கள் நிறைந்த சுடுகாடாக மாறிவிடும் அபாயம் எதிரே தெரிகிறது. சுருங்கக் கூறின்,  வினைத்திறன்மிக்க மனப்பாங்கு விருத்திகளை சமுதாயத்தில் ஏற்படுத்தக்கூடிய கல்வி முறையினால் மாத்திரம்தான் இலங்கையின் எதிர்காலத்தை வசந்த காலமாக மாற்ற முடியும்; என்பது உள்ளங்கை நெல்லிக்கனி.
உசாத்துணைகள்

01. கல்வியின் அடிப்படைகள்,தொகுதி-1,இலங்கைத் திறந்த பல்கலைக்கழகம், திருத்தியமைக்கப்பட்ட பதிப்பு,2009
02. கல்வி உளவியல்,தொகுதி-1,இலங்கைத் திறந்த பல்கலைக்கழகம், திருத்தியமைக்கப்பட்ட பதிப்பு,2009
03. வெற்றிகரமான கற்பித்தல், கலாநிதி பக்கீர் ஜஃபர், 2004
04. மகிழ்ச்சிகரமான பாடசாலை, கே. ஞானரத்தினம்
05. விரிவுரைகள், கே. ஞானரத்தினம், சிரேஷ;ட விரிவுரையாளர், இலங்கைத் திறந்த பல்கலைக்கழகம்
Websites

02.  www.statista.com
03.  www.lankasri.net
04.  www.aljazeera.com
05.   www.statistic.gov.lk
06.   www.ceylontoday.lk
07.   www.worldometers.info
08.   www.epid.gov.lk
09.   www.thamilan.lk

தொழிற்சந்தையை நோக்கிய இலங்கைக் கல்வியின் நீடித்த பயணம்... றாபி எஸ் மப்றாஸ்



இலங்கையில் கல்வி மற்றும் தொழிற்சந்தைக்கிடையேயான தொடர்பு - ஒரு விமர்சனப் பார்வை -



றாபி எஸ் மப்றாஸ்

இலங்கையின் கல்விச் செயன்முறையானது பண்டைய காலத்திலிருந்து ஆரம்பித்து கோயிற் பள்ளி, பிரிவேனாக்கள் என உள்நாட்டுக் கல்விமுறைகள் ஊடாகவும் பின்னர் குடியேற்ற ஆட்சிக்காலத்தில் பங்குப்பாடசாலைகள், கல்லூரிகள் எனவும் பரிணாமம் பெற்று இலவசக் கல்வியின் அறிமுகத்தோடு இலங்கையின் கல்வி அபிவிருத்தி ஒரு வேக வளர்ச்சியை அடைந்தது எனலாம்.
 மேலும் பாடசாலை மாணவர்களை அதிகமாக உள்ளீர்த்துக் கொளவதற்காக இலவச சீருடை, மதிய போசனை,போஷாக்குணவுத்திட்டம், இலவசப் பாடநூல் விநியோகம் என ஏராளமான திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு இலங்கையின் ஆரம்பக் கல்வி விருத்தியிலும் நாட்டின் எழுத்தறிவு வீதத்தை அதிகரிக்கச் செய்வதிலும்  நாடு வெற்றி கண்டுள்ளது எனலாம்.
என்றாலும் கல்வி பெறுகின்றவர்களால் சமூகத்தின் தேவை நிறைவு செய்யப்பட்டுள்ளதா? நாட்டின் தேசிய உற்பத்திக்கு பங்களிப்பு செய்யப்படுகிறதா? கல்வி ஒரு முதலீடாகக் கொள்ளப்பட்டு அதற்கான இலாபம் நாட்டுக்கு கிடைக்கின்றதா? போன்ற வினாக்களுக்கு இன்னும் ஆரோக்கியமான விடை கிடைத்திருப்பதாகத் தெரியவில்லை.

இலங்கைக் கல்வியும் தொழிற்ச் சந்தையும்
பல்வேறு சமூக கலாச்சாரப் பின்னணியிலிருந்து வருகின்ற பிள்ளைகளுக்கும் கல்வி வாய்ப்பைப் பெற்றுக் கொடுப்பதற்காக தாய்மொழியைப் போதனா மொழியாக்குதல் மற்றும் 1961 ல் நியமிக்கப்பட்ட தேசியக் கல்வி ஆணைக்குழுவினால் விதந்துரைக்கப்பட்ட நால்வகைப் பாடசாலைகள் திட்டம் மற்றும் 1966ம் ஆண்டு வெளியிடப்பட்ட வெள்ளை அறிக்கை, 1967 ஆம் ஆண்டு வரையப்பட்ட கல்விச்சட்ட வரைபு, 1972ம் ஆண்டின் கல்விச் சீர்திருத்தங்கள் போன்ற பல கல்விக் கொள்கைகள் கொண்டுவரப்பட்டு இலங்கையின் கல்வித்துறை தொழிற்சந்தையின் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும் என எதிர்பார்க்கப்பட்டாலும் நடைமுறைப்படுத்துவதில் காணப்பட்ட பல்வேறு சிக்கல்களினால் அவை இன்றும் கொள்கைகளாகவே காணப்படுகின்றன என்பது கசப்பான உண்மையாகும்.

தொழிற்சந்தை என்பது தொழிலாளர்களுக்கான கேள்விக்கும் நிரம்பலுக்கும் ஏற்ப காணப்படும் தொழிலாளருக்கும் தொழில்வாய்ப்புக்கும் இடையிலான தொடர்பாகும். அதாவது சமூகத்தில் காணப்பாடும் தொழில்வாய்ப்பிற்கு ஏற்ப தொழிலாளர்கள் காணப்படுவார்களாயின் அங்கு தொழிற்ச்சந்தைச் சமனிலை காணப்படுகிறது எனலாம். அதே போல தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகமாகவிருந்து தொழில்வாய்ப்புக் குறைவாகவிருந்தாலோ அல்லது தொழிலுக்குப் பொருத்தமான ஊழியர்கள் இல்லாவிட்டாலோ அங்கு வேலைவாய்ப்பின்மை காணப்படும்.

இலங்கைக் கல்வியின் இயல்பும் தொழிற் சந்தையின் நிலையும்

உண்மையில், கல்வியும் பயிற்சியும் தொழிற்படை உருவாக்கத்தின் திறவுகோல்கள் ஆகும். இருப்பினும் இலங்கையின் வரலாற்று ரீதியான கல்வி முன்னெடுப்புக்கள் இத்தகைய தேவைகளை உருவாக்கத் தவறிவிட்டன என்றே கூறலாம். இன்று எமது நாடு இக்குறைபாட்டை நன்குணர்ந்து 2030 பேண்தகு அபிவிருத்தி இலக்குகளில் இளைஞர்களும் அவர்களுக்கான திறன்களும் என்பதுவும் மிக முக்கியமானதொன்றாகும்.

அந்தவகையில் யுனெஸ்கோ வினது கருத்துப்படி ' உலகெங்கிலும் இளைஞர்களின் வேலையின்மைக்கு முக்கியமான காரணங்களில் ஒன்றாவது தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் திறன்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு தேவைப்படும் திறன்களுக்கிடையிலான பாரிய வேறுபாடுகளேயாகும்' இலங்கைக் கல்வி முறை குறித்து ஒரு அறிஞரின் கூற்று இங்கு குறிப்பிடத்தக்கது ' பெரும்பாலான இலங்கையர்கள் அறிவாளிகள் ஆனால் திறனாளிகள் அல்லர்' எனவே தொழிற்சந்தை வேண்டிநிற்கும் திறன்களை இலங்கைக் கல்வி முறைமையினால் விரும்பியோ வெறுத்தோ பெற்றுக்கொடுக்க முடியவில்லை என்பதையே இவையனைத்தும் கட்டியம் கூறுகின்றன.

2019 ம் ஆண்டு முதல் காலாண்டு தகவலின் படி இலங்கையின் உழைக்கும் ஊழியர்படை 8.6 மில்லியன்கள் ஆகும் அதே நேரம் ஊழியர்படை வயதை எட்டியும் இன்னும் உழைக்காத தரப்பினரின் தொகை 7.7 மில்லியன்கள் ஆகும் எனவே 15 வயதுக்கு மேற்பட்டோரில் ஏறத்தாழ அரைவாசிப்பேர் தொழிற்சந்தைக்கு பங்களிப்புச் செய்யவில்லை. அதாவது ஊழியர்படைப் பங்களிப்பு வீதம் 52.6 என்பது தெளிவாகிறது. (www.statistics.gov.lk  )

மேலும் இலங்கையின் வேலையின்மை 2019ம் ஆண்டில் 4.7 வீதத்தினர் காணப்படுகின்றனர் இவற்றிலும் குறிப்பாக கா.பொ.த உயர்தரம் மற்றும் அதற்கு மேல் கல்வித்தகைமை கொண்டவர்களின் வேலைவாய்பின்மை 7.9 வீதமாகக் காணப்படுகின்றது. எனவே இத்தகைய புள்ளிவிபரங்களிலிருந்து நோக்கும் போது கல்வித்தகைமை அதிகரித்துச் செல்லச் செல்ல வேலையின்மையும் அதிகரித்துச் செல்வது இலங்கையின் கல்வி தொழிற்சந்தைக்கான இடைவெளியை இன்னும் தூரமாக்குகிறதே தவிர குறைக்கவில்லை என்பது புலனாகிறது. அதிலும் குறிப்பாக கா.பொ.த உயர்தர கல்வித் தகைமைக்கு மேற்பட்ட பெண்களின் வேலையின்மை 10.6 வீதமாகக் காணப்படுவதானது பெண்களின் கல்வியறிவு அதிகரிக்கும் அளவுக்கு அவர்களின் தொழற்சந்தைக்கான பங்களிப்பானது வெகுவாகக் குறைகிறது என்பது புலனாகிறது. (www.statistics.gov.lk )

இதிலிருந்து இருவகையான வினாக்கள் எழுகின்றன. முதலாவது இலங்கையில் கல்வி கற்போரின் எண்ணிக்கை குறைவானதா? அல்லது வேலைவாய்ப்புக்கள் குறைவானதா? இரண்டுக்குமே இல்லை என்றே விடை பகர வேண்டும் ஏனெனில் 2019 ம் ஆண்டின் இலங்கையின் வயதுவந்தோர் எழுத்தறிவு வீதம் 96.3 வீதமாகும் பட்டதாரிகள் மாத்திரம் 10 -12 வீதத்தினர் ஆகும் மேலும் 350000க்கு மேற்பட்டோர் ஆரம்பக்கல்வி பெற்றோராவர். எனவே இலங்கையில் கல்வியறிவு குறைவாக உள்ளது என்பது பிழையான கருத்தாகும். (www.statistics.gov.lk )

காரணங்களும் விளைவுகளும்

அதேவேளை இலங்கையில் வேலைவாய்ப்புக்களைப் பொறுத்தவரையில் அன்றாட செய்தித்தாள்களைப் புரட்டிப்பார்த்தால் ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புக்கள் விளம்பரம் செய்யப்படுகின்றன மாத்திரமல்லாமல் சமூக ஊடகங்களிலும் இத்தகைய விளம்பரங்களைக் காணமுடியும் அதிலும் குறிப்பாக ஒரே விளம்பரங்கள் தொடர்ச்சியாக விளம்பரம் செய்யப்படுவதைக் காணமுடிகிறது. என்றாலும் இத்தகைய வேலைவாய்ப்புக்களைப் பெற்றுக்கொள்ள போதிய திறன்படைத்தவர்களை எமது கல்வி முறை உருவாக்கவில்லை என்பதையே குறிப்பிட்டுக்காட்ட முடிகிறது.
இன்று திறன்சார்ந்த தொழில்வகைகளான மோட்டார் பொறிமுறை, கார்,கனரக வாகன பழுதுபார்ப்பு, மின்னியல், மின்பொருத்துனர் போன்ற துறைசார் வேலைவாய்ப்புக்கள் ஏராளமாக காணப்படுகின்ற போதிலும் அதனை நிறைவுசெய்யக் கூடியவர்கள் மிக அரிதாகவே உள்ளனர்.
எனவே இன்று கா.பொ.த உயர்தரத்தில் தோற்றும் 100000 மாணவர்களும் அரச பல்கலைக்கழகங்களில் நுழைய எத்தனிப்பதும் அவர்களுள் பெரும்hபலான மாணவர்கள் மானுடவியல் விஞ்ஞானக் கற்கைகளைக் கற்பதுவும் வேலையின்மைப் பிரச்சினையை இன்னும் தீவிரப்படுத்துகிறது.

முன்மொழிவுகளும் ஆலோசனையும்

இத்தகைய குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் முகமாக பதின்மூன்றாண்டுக் கட்டாயக் கல்வித் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டிருப்பதும் அத்திட்டத்தினை தொழிநுட்பக் கல்லூரிகளினதும் தொழிற்பயிற்சி அதிகாரசபையினதும் ஒத்துழைப்போடும் இலங்கை செய்ய விளைவது வரவேற்கத்தக்கதாகும்.
மேலும் கல்வி தொழிற்சந்தையை நிரப்புவதற்கு உதவுமாக இருந்தால் இலங்கையில் வேரூன்றியிருக்கும் வேலையின்மை, வறுமை, போதைப் பொருள் கடத்தல், பாதாள உலகக் கொள்ளை பல பிரச்சினைகளை மிக இலகுவாகத் தீர்வுக்கு கொண்டுவரலாம்.
மேலும் அரசு நல்ல பல கொள்கைகளை வகுப்பதோடு நின்றுவிடாது அதனை ஆசிரியர் பெற்றோர் மற்றும் மாணவர்களை அறிவூட்டல் செய்ய வேண்டும், அவர்களை போதியளவு ஊக்குவிக்க வேண்டும். அதனை நடைமுறைப்படுத்துவதற்கு திறமை வாய்ந்த ஆசிரியர்களைப் பயிற்றுவிக்க வேண்டும்
மேலும் இன்னுமொருபடி மேலாகச் சொல்வதானால். சகல மாணவர்களுக்கும் தொழிற்கல்வி கற்பதற்கு வாய்ப்பளிக்க வேண்டும். ஏனெனில் பல விஞ்ஞானிகள் வகுப்பறைக்குள் மறைந்திருக்கலாம். மேலும் தேசிய மற்றும் சர்வதேச அளவில் மாணவர்களின் புத்தாக்கங்கள் கொண்டு செல்லப்பட வேண்டும். பொதுவாகப் பாடசாலை ஒரு சிறந்த தொழில்சார் நிபுணனை உருவாக்குவதற்கான சிறந்த களம் என்பது அனைவராலும் உணரப்பட வேண்டும்.

 உசாத்துணைகள்

1) ஒப்பீட்டுக் கல்வியும் கல்விப்பிரச்சினைகளும் ளுவுP8505 இ இலங்கை திறந்த பல்கலைக்கழகம், திருத்தியமைக்கப்பட் பதிப்பு-2009
2) 2019ம் ஆண்டு முதலாம் காலாண்டுக்கான ஊழியர் படை அறிக்கை
3)      https://www.sundayobserver.lk 
4)      https://www.statistics.gov.lk

3       5)     https://www.ft.lk
      6)     https://www.researchgate.net 
          7)      https://www.wikipedia.or


25.02.2020


இலங்கையில் சகவாழ்வுக்காக இறுதியாய் சில வார்த்தைகள் - தொடர் 09- றாபி எஸ் மப்றாஸ்

இலங்கைப் பன்மைச் சமூகத்தில் சகவாழ்வைக் கட்டியெழுப்புதல் - ஒரு இஸ்லாமிய நோக்கு- (இறுதித் தொடர்)

றாபி எஸ் மப்றாஸ்

முடிவுரை

1) பன்மைச் சமூகங்கள் வாழும் நாடுகளிலெல்லாம் சகவாழ்வு பற்றிய கருத்தாடல்கள் சமகாலத்தில் ஆழமாக வலியுறுத்தப்பட்டு வருகின்றன. பன்மைச் சமூகங்களின் நாடு என்ற வகையிலும் கடந்த காலங்களின் கசந்த அனுபவங்களால் பன்மைச் சமூகங்களுக்கு மத்தியில் முறுகல் நிலை அதிகரித்துள்ள நாடு என்ற வகையிலும் இலங்கைச் சூழலில் சகவாழ்வைக் கட்டியெழுப்ப வேண்டிய தேவை பரவலாக உணரப்பட்டுள்ளது.

2) இஸ்லாம் பன்மைத்துவத்தை இறை நியதியாக ஏற்று அங்கீகரிக்கும் மார்க்கம் என்ற வகையிலும் வரலாற்றில் சகவாழ்வை சாத்தியப்படுத்திக் காட்டிய மார்க்கம் என்ற வகையிலும் இலங்கைப் பன்மைச் சமூகங்களுக்கு மத்தியில் சகவாழ்வைக் கட்டியெழுப்புவதற்கான அடிப்படைகளைப் பெற்றுக் கொள்வது சாலப் பொருத்தமாகும்.

3) இஸ்லாத்தின் ஒளியில் இலங்கைப் பன்மைச் சமூகங்களுக்கு மத்தியில் சகவாழ்வு குறித்து நோக்கும் போது இரு முக்கிய பகுதிகள் கவனம் செலுத்தப்பட வேண்டும்.
        (1) பெரும்பான்மை, சிறுபான்மை என எந்த வேறுபாடுகளும் பாராமல் இலங்கையில் வாழும் அனைத்து சமூகங்களும் கடைப்பிடிக்க வேண்டியவை.
        (2) இலங்கையின் சிறுபான்மை சமூகம் என்ற வகையில் குறிப்பாக முஸ்லிம் சமூகம் கடைப்பிடிக்க வேண்டியவை.

4) இலங்கையில் சகவாழ்வு மலர எல்லா சமூகங்களும் கடைப்பிடிக்க வேண்டியவைகள்.
       1) இலங்கையின் அனைத்து சமூகங்களும் மனித சமத்துவத்தைப் பேணி நடப்பதோடு மனிதர்கள் அனைவரும் சகோதரர்கள் என்ற வாஞ்சை உணர்வோடு பழக வேண்டும்.
     2) தத்தமது கொள்கைகளை சுதந்திரமாக பின்பற்றுவதற்கான வாய்ப்பு எல்லா சமூகத்தவர்களுக்கும் வழங்கப்படுவதோடு மற்ற சமூகத்தின் மத கலாச்சார பண்பாடுகளை மதித்து சகிப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும்.
     3) இனத்தை அல்லது மதத்தை மையப்படுத்திய சமூகப் பணிகளை விட தேவையுடையோருக்கும் பாதிக்கப்பட்டோருக்குமான தேசம் தழுவிய பணிகள் மேற்கொள்ளப்படுவது சாலச் சிறந்தது. இன மத வெறிகளையும் துவேஷங்களையும் களைந்து 'நாம் இலங்கையர்கள்' என்ற உணர்வும் தேசப்பற்றும் மேலோங்க வேண்டும்.
    4) பக்கச் சார்புகள் ஏதுமின்றி நீதி செலுத்தப்படுவதோடு சட்டத்தின் முன் அனைவரும் சமமாகக் நடாத்தப்பட வேண்டும். விட்டுக்கொடுப்பு, மன்னிப்பு போன்ற நற்பண்புகள் அனைவர் மத்தியிலும் பரவலாகப் பேணப்பட வேண்டும்.

5) இலங்கையில் சகவாழ்வு கட்டியெழுப்பப்பட சிறுபான்மை என்ற வகையில் இலங்கை முஸ்லிம் சமூகம் கடைப்பிடிக்க வேண்டியவைகள்.
     1) இலங்கை முஸ்லிம் சமூகத்தைப் பொறுத்தவரையில் சர்ச்சைக்குள்ளாகியிருக்கும் ஒலி பெருக்கிப் பாவனை, முஸ்லிம் பெணகளின் ஆடை விவகாரம், சுற்றுப் புற சூழல் சுத்தம், இறைச்சிக்காக அறுக்கப்படும் பிராணிகள் என முஸ்லிம்களின் சமூக வாழ்வொழுங்குகள் தொடர்பாக அவதானமாக செயற்பட வேண்டும்ளூ பிற சமூகங்களின் வெறுப்புணர்வை சம்பாதித்து விடக்கூடாது.
     2) பன்மைச் சமூகங்களோடு கலந்து வாழும் அதே வேளை கரைந்து போய்விடக் கூடாது.
     3) பிற சமூகங்களுடன் இஸ்லாம், முஸ்லிம்கள் பற்றிய மனம் திறந்த கலந்துரையாடல்களை மேற்கொள்ள வேண்டும்.

6) மேற்குறிப்பிட்ட அத்தனை விடயங்களும் அரசியல், பொருளாதாரம், சமூகம் என எல்லாத் துறைகளிலும் அதிகார மட்டம் முதல் அடி மட்டம் வரையிலும்  நடைமுறைப்படுத்தப்படுமாயின் நிச்சயமாக இலங்கைப் பன்மைச் சமூகங்களுக்கு மத்தியில் சகவாழ்வு கட்டியெழுப்பப்படும்.


1. உசாத்துணை
அரபியில்...
1. லிமாதா அல்-இஸ்லாம், கலாநிதி யூசுப் அல் கர்ளாவி, முதற் பதிப்பு – 2004, மக்தபது வஹ்பா, கெய்ரோ.
2. அல்- இஸ்லாம் அல்லதி நத்ஊ இலைஹி, கலாநிதி யூசுப் அல் கர்ளாவி, முதற் பதிப்பு – 2004, மக்தபது வஹ்பா, கெய்ரோ.
3. தப்ஸீருல் முனீர், கலாநிதி உஸ்தாத் வஹ்பா ஸூஹைலி, பத்தாம் பதிப்பு-2003, தாருல் பிக்ர், டமஸ்கஸ்.
4. கஸாஇஸ் அல் ஆம்மா லில் இஸ்லாம், கலாநிதி யூசுப் அல் கர்ளாவி, முதற் பதிப்பு – 1999, தாருஷ் ஷூரூக், கெய்ரோ.
5. நஹ்வ பிக்ஹின் ஜதீத் லில் அகல்லிய்யாத், ஜமாலுத்தீன் அதிய்யா முஹம்மத், முதற் பதிப்பு – 2003, தாருஸ் ஸலாம், கெய்ரோ.
6. பீ பிக்ஹில் அகல்லிய்யாத் அல்-முஸ்லிமா, கலாநிதி யூசுப் அல் கர்ளாவி, முதற் பதிப்பு – 2001, தாருஷ் ஷூரூக், கெய்ரோ
7. தஆறுப் வத்தஆயுஷ் பைன கைஅரில் முஸ்லிமீன், கலாநிதி மூஸா ஷரீப், முதற் பதிப்பு – 2006, தாருல் இப்னு கஸீர்.
தமிழில்...
8. சங்கைமிக்க குர்ஆன் மற்றும் அதன் கருத்துக்களின் மொழி பெயர்ப்பு, மன்னர் பஹத் அச்சக வளாகம்.
9. பன்மைச் சமூகத்தில் சகவாழ்வும் தனித்துவமும், றஊப் ஸெய்ன், முதற் பதிப்பு - ஜூலை-2014, சமூக விஞ்ஞானங்களுக்கான இப்னு கல்தூன் ஆய்வகம்.
10. சகிப்புத்தன்மைக்கும் சமாதான வாழ்வுக்குமான இஸ்லாமிய அடிப்படைகள், அஷ்ஷெய்க் எஸ். எச். எம் பழீல், முதற் பதிப்பு, தேசிய ஷூறா சபை.
11. சகவாழ்வுளூ சாத்தியப்படுத்துவதற்கான ஆலோசனைகளும் வழிகாட்டல்களும், கலாநிதி அஷ்ஷெய்க் எச். எல். எம் ஹாரிஸ், முதற் பதிப்பு - ஒக்டோபர்-2013, விஸ்டம் பப்ளிஷர்ஸ்.

வலைத்தளங்கள்...
1. www.vocabulary.com
2.. www.merriam-webster.com
3. https://en.m.wikipedia.org
4.       www.freedictionary.com

இலங்கை முஸ்லிம்களின் கவனத்திற்கு !!! - தொடர் - 08 - றாபி எஸ் மப்றாஸ்

இலங்கையில் சகவாழ்வை கட்டியெழுப்ப சிறுபான்மை சமூகங்கள் குறிப்பாக இலங்கை முஸ்லிம்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவை 
தொடர் - 08
றாபி எஸ் மப்றாஸ்


1. சமூக வாழ்வொழுங்குகளை நெறிப்படுத்திக் கொள்ளல்

இலங்கையில் சகவாழ்வு கட்டியெழுப்பட வேண்டுமாயின் மேற்சொன்ன விடயங்;கள் தவிர இன்னும் பல நெறிப்படுத்தல்களையும் ஒழுங்குபடுத்தல்களையும் இலங்கை முஸ்லிம் சமூகம் அவசரமாக செய்தாக வேண்டும். இவை இலங்கையில் இஸ்லாத்தின் சுமுகமான இருப்புக்கும் சகவாழ்வின் வளர்ச்சிக்கும் வழிகோலும்.

2. ஒலிப்பெருக்கிப் பாவனை

இன்று ஒலிப்பெருக்கிப் பாவனையில் அளவுக்கடந்து விட்ட சமூகமாக நாம் மாறியிருக்கிறோம். வெறுமனே, 9.7மூ ஆக வாழும் நாம் எமது ஐவேளை தொழுகைக்கான அதான்களோடு ஒலிப்பெருக்கி பாவனையை நிறுத்திவிடாது பயான் நிகழ்ச்சிகள், குத்பா பேருரைகள், கந்தூரி, ஸலவாத் மஜ்லிஸ் இது தவிர ரமழான் காலங்களில் இரவு நேர தொழுகைகள் அனைத்தையும் ஒலிப்பெருக்கியினூடாக மேற்கொள்வது பிற சமூகங்களுக்கு தொந்தரவையும், எரிச்சலையும் ஏற்படுத்துகின்றது. இதனால் அண்மைக்காலங்களில் எத்தனையோ சச்சரவுகள் ஏற்பட்டுள்ளன.
எனவே, எமது ஒலிப்பெருக்கி பாவனையை பள்ளியின் பரப்பு வரை சுருக்கி கொள்வதும் குறிப்பாக பிற சமூகத்தவருக்கு மத்தியில் வாழும் முஸ்லிம்கள் குறித்த சில பள்ளிகளின் சுற்றுவட்டத்துக்கு மாத்திலம் கேட்குமளவுக்கு அதான் கூறுவதோடு சுருக்கிக் கொள்வது நல்லது.

3. முஸ்லிம் பெண்களின் ஆடை அமைப்பு

அண்மைய சில வருடங்களாக எமது முஸ்லிம் பெண்கள் கறுப்பு நிற ஆடையோடு முகத்தை மூடும் வழக்கத்தைக் கொண்டிருக்கிறார்கள்.
பொதுவாக இஸ்லாமிய அறிஞர்களுக்கு மத்தியில் பெண்கள் உடல் முழுவதும் மறைப்பது கட்டாயமானதாகும் என்றதொரு வாதமும் முகம் மணிக்கட்டு தவிர ஏனைய பகுதிகளை மறைப்பது கட்டாயமாகும் என மற்றொரு வாதமும் முன்வைக்கப்படுகின்றன. இதில் இரண்டாவது வாதமே பலமான வாதமாகும் என்பது இஸ்லாமிய சட்டத்துறை  அறிஞர்களது பரவலான நிலைப்பாடாகும்.  (தப்ஸீருல் முனீர், கலாநிதி உஸ்தாத் வஹ்பா ஸூஹைலி, பத்தாம் பதிப்பு-2003, தாருல் பிக்ர், டமஸ்கஸ், 09ம் பாகம், பக்: 551)

இவற்றுக்கப்பால் நிகாப் (முகத்தை மூடுதல்) குறித்த பாரிய சர்ச்சைகளும், தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்ற கருதுகோள்களும் தேசிய மட்டத்தில் எழுந்துள்ளன. எனவே, பெரும்பான்மை சமூகங்களுக்கு மத்தியில் இஸ்லாத்தின் நலனைக் கருத்திற் கொண்டு முகத்தை மறைக்கும் விடயத்தில் நெகிழ்வுப் போக்கை கையாள்வது சாலச் சிறந்ததாகும்.
அதேவேளை முஸ்லிம் பெண்களின் கறுப்பு நிற ஆடைகளும் பிற சமூகத்தவர் மத்தியில் சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இஸ்லாம் பல வகையான நிறங்களில் ஆடையணிவதை அனுமதித்திருக்கும் நிலையில் பல்வேறு விமர்சனங்களுக்கு மத்தியில் கறுப்பு நிறத்தில் விடாப்பிடியாக இருக்க வேண்டிய அவசியமில்லை. எனவே, குறிப்பாக முஸ்லிம் பெண்கள் விதவிதமான நிறங்களில் ஆடையணியவதை வழக்கமாக்கி கொள்வது சமகாலத்துக்கு மிகப்பொருத்தமானதாகும்.
பிற சமூகங்கள் முஸ்லிம் சமூகத்தை எரிச்சலோடும் சந்தேகக் கண் கொண்டும் பார்ப்பதற்கு நாம் இடமளிக்கக் கூடாது. ஏனெனில் அத்தகைய பார்வைகள் இலங்கையின் சகவாழ்வுக்கு பேரிடியாக அமையும்.

4. உணவுக்காக உயிரினங்களை அறுத்தல்

அல்லாஹ் எமக்கு ஹலாலாக்கிய (ஆகுமாக்கிய) மாடு, ஆடு, கோழி போன்ற உயிரினங்களின் இறைச்சியைச் சாப்பிடுவதில் தவறேதும் கிடையாது. ஆனால், குறிப்பாக மாடுகளை அறுப்பதற்காக கொண்டு செல்லும்போது அளவுக்கதிகமான மாடுகளை ஒரே வாகனத்தில் அடைத்துச் செல்வதும், அதனை பொது மக்களின் பார்வையில் படும்படி துன்புறுத்தி அறுத்தலும் பின்பு இறைச்சிக்கடைகளில் அவை இரத்தம் சொட்டச் சொட்ட தொங்கவிடுவதும் பார்ப்பவர் நெஞ்சை உருக்கிவிடுகின்றது.
உயிரினங்களிடத்தில் அன்பு காட்டுமாறு ஏவும் இஸ்லாம் மார்க்கம் அதனை நல்ல முறையில் அறுத்துச் சாப்பிடுமாறும் ஏவுகின்றது. அதுமட்டுமல்லாது இந்த நாட்டில் வாழும் பிறசமூகங்கள் மாடு, பசு போன்ற உயிரினங்களை தெய்வமாக மதிக்கின்றன. எனவே, அவர்களின் மனம் புண்படாதவாறு அத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
ஏனெனில், இத்தகைய விடயங்கள் கடந்த காலங்களில் பெரும் குழப்பங்களாக விஷ்வரூபமெடுத்துள்ளன. தொடர்ந்தும் எமது வாழ்வொழுங்குகளை நெறிப்படுத்தாவிட்டால் இந்நாட்டில் சகவாழ்வு சாத்தியமற்றுப்போய்விடும்.
மேலும், எமது சமூகத்தில் குறுக்கு வழிகளையும் வட்டித்தொழில்களையும் பொய் புரட்டு கலந்த வியாபாரங்களையும் பயன்படுத்தி வசதியான ஆடம்பர வாழ்வுக்கு அடிமைப்பட்டுப் போகும் சிலரும் இருக்கின்றனர். இத்தகைய போக்கும் பிற சமூகத்தவர்களது கசப்புணர்வை சம்பாதிக்க ஏதுவாக அமைகிறது. 
அதேபோல், இலங்கை முஸ்லிம்களில் பலர் சுற்றுப் புற சூழல் சுத்தத்தில் அக்கறை செலுத்துவதில்லை. பொது குளம் குட்டைகளில் குப்பை கொட்டுதல் வீட்டுக் கழிவுகளை பொதுப்பதைகளில் செலுத்துதல் போன்ற அசுத்தமான வேலைகளில் ஈடுபடுவதில் எமது முஸ்லிம்கள் முன்நிற்கிறார்கள். ஆனால் 'இஸ்லாம் சுத்தம் ஈமானின் பாதி' (முஸ்லிம்) என்றும் 'நிச்சயமாக அல்லாஹ் பாவமீட்சி கோருவோரையும், தூய்மையானவர்களையும் விரும்புகிறான்.' (அல் பகறா - 222) என்றும் சுத்தத்தின் முக்கியத்துவத்தை அல்குர்ஆன் சுட்டிக்காட்டுகிறது. மேற்சொன்ன நடவடிக்கைகள் பிற சமூகத்துச் சாதாரண மக்களின் வெறுப்புணர்வை சம்பாதித்துக் கொள்ள காரணமாக அமையும். மேலும், அது இலங்கையின் சகவாழ்வைக் கட்டியெழுப்பும் பணிக்கு பெரும் பாதிப்பாக அமையும். 
எனவே, இலங்கையில் சகவாழ்வைக் கட்டியெழுப்ப இலங்கை முஸ்லிம்கள் இஸ்லாம் வலியுறுத்திய விதத்தில் தம்மை ஒழுங்குபடுத்திக் கொள்ள வேண்டும். 

5. கரைந்து போகாது கலந்து வாழ்தல் 

இஸ்லாம் ஏனைய மதக் கலாசாரங்களை அனுசரித்து அங்கீகரித்துச் செல்லும் மார்க்கமாகும். என்றாலும் தனது தனித்துவத்தையும் அடிப்படை நம்பிக்கைக் கோட்பாடுகளையும் இழந்து தன்னை தாரை வார்த்துவிடக் கூடாது என்பதில் உறுதியாகவுள்ளது. அமெரிக்க சமூகவியலாளர் Milton Girden (1964) சகவாழ்வுக்கான கட்டங்களை விளக்கும் போது இத்தகைய போக்கை  Cultural Assimilation ( Cultural Assimilation என்பது ஒரு குறித்த கலாச்சாரத்தைச் சார்ந்த ஒருவர் வேறு கலாச்சாரங்களோடு இணைந்து வாழும் போது அவர்களின் சட்டங்களையும் வாழ்க்கை முறைகளையும் பேணி வாழும் அதேவேளை சுய அடையாளத்தையும் தனித்துவத்தையும் காத்துக் கொள்ளும் போக்கு ஆகும்.)  என்று அழைக்கிறார் ( Cross Cultural Communication (Block - 1), Level – 5, B.A Social Science, OUSL,  P: 43.) 
நபி (ஸல்) அவர்கள் பன்மைச் சமூகங்களில் இத்தகைய பண்புகளையே கையாண்டுள்ளார்கள். 'மக்களுடன் கலந்து வாழ்கின்ற, அவ்வாறு கலந்து வாழும்போது இழைக்கப்படும் தீங்குகளில் பொறுமையாக இருக்கின்ற முஃமின்ளூ கலந்துவாழாத தீமைகளின்போது பொறுமையைக் கையாளாத முஃமினை விட சிறந்தவன்.'  (திர்மிதி – 2507)
இலங்கை முஸ்லிம்கள் இருவகையான தீவிரப் போக்குகளைக் கொண்டுள்ளனர். அந்த வகையில், ஒரு தரப்பினர் பிற சமூகங்களை விட்டும் ஒதுங்கி அவர்களைப் புறக்கணித்து வாழும் போக்கைக் கொண்டுள்ளனர். மறு தரப்பினர் பிற சமூகங்களோடு கலந்து அவர்களது கலாசார விழுமிய களியாட்டங்களிலே கரைந்து போகின்ற போக்கைக் கொண்டுள்ளனர். ஆனால் இஸ்லாத்தின் பார்வையில் இவ்விரு போக்குகளுமே தவறானவைளூ ஏற்றுக்கொள்ள முடியாதவை. 
எனவே, இலங்கை போன்ற பன்மைச் சமூகங்களுக்கு மத்தியில் இலங்கை முஸ்லிம்கள் மனித சமூகத்துக்கும் இலங்கை தேசத்துக்கும் நன்மை பயக்கும் விடயங்களான இரத்த தானம், போதைப் பொருள் ஒழிப்பு, மர நடுகை, டெங்கு விழிப்புணர்வு, சுதந்திர தின நிகழ்வு போன்றவற்றில் பிற சமூகத்தவரோடு இணைந்து செயற்பட வேண்டும். அதேபோல் பிற சமூகத்தவரது சுக துக்கங்களில் பங்கெடுக்கும் முகமாக அவர்களது திருமண வீடுகளுக்கும் மரணச் சடங்குகளுக்கும் செல்வதனூடாக சகவாழ்வு எனும் கயிற்றை பலமாக்கிக் கொள்ள முடியும். ஆனால் காதலர் தினக் கொண்டாட்டங்கள், இசைக் கச்சேரிகள், புதுவருடக் களியாட்டங்கள் போன்றவற்றிலிருந்து கவனமாக விலகிக் கொள்ள வேண்டும். மேலும், எமது அடிப்படைக் கடமைகள், ஹலால் விவகாரங்கள், பெண்களுக்கான ஹிஜாப் போன்ற விடயங்களில் எமது தனித்துவத்தை பேணிக்கொள்ள வேண்டும். 
இலங்கையின் பன்மைச் சமூகங்களுக்கு மத்தியில் கலந்து கரையாது வாழும்போது எமக்கென தனியான அடையாளமும் மரியாதையும் பிற சமூகத்தவர் மத்தியில் உருவாவதோடு இந்நாட்டில் சகவாழ்வைக் கட்டியெழுப்புவற்கான வாசல்கள் அகலத் திறந்து விடப்படும் என்பதில் ஐயமில்லை. 

6. மனம் திறந்த கலந்துரையாடல்களை மேற்கொள்ளல்

சகவாழ்வைக் கட்டியெழுப்ப இஸ்லாம் காட்டித்தரும் இன்னொரு வழிமுறைதான் பிற சமூகத்தவரோடு மனம் திறந்த கலந்துரையாடல்களை மேற்கொள்வதாகும். இது பற்றி அல்குர்ஆன் குறிப்பிடும்போது, 'வேதம் கொடுக்கப்பட்டவர்களுடன் மிக அழகிய முறையிலன்றி தர்க்கம் புரிய வேண்டாம்.'  என்கிறது. (அன்கபூத் - 46).
இஸ்லாம், முஸ்லிம்கள் பற்றிய முஸ்லிமல்லாதவர்களின் புரிதர்களை அறிந்து அதற்கேற்ப எமது கலந்துரையாடல்களை அமைத்துக் கொள்ளவேண்டும். 'அவர்களுடன் மிக அழகிய வழிமுறைகள் மூலமாகவே கருத்துப்பரிமாறல் செய்வீராக.' ( அந்நஹ்ல் - 125) என்ற குர்ஆன் வசனத்தின் அடிப்படையில் பார்க்கும்போது நாம் மேற்கொள்கின்ற கலந்துரையால்கள்ளூ பல்கலைக்கழகங்கள், அலுவலகங்கள், வியாபாரத்தலங்கள், பொது இடங்கள் எனப் பல மட்டங்களிலுள்ளோரையும் உள்ளடக்கியதாக அமைய வேண்டும். மேலும், தரமான ஆய்வாளர்களைக் கொண்டு கள ஆய்வுகளும் கேள்வி பதில் நிகழ்சிகளும் சிங்கள, ஆங்கில மொழிகளில் புத்தக வெளியீடுகளும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது புலனாகின்றது. 
இவ்வாறான காத்திரமான செயற்பாடுகள் ஊடாக இஸ்லாம், முஸ்லிகள் பற்றிய தப்பெண்ணங்களை பிற சமூகத்தவர்களது மனங்களிலிருந்து அகற்றிவிடலாம். இதனூடாக இலங்கையில் சகவாழ்வைச் சுமுகமாக கட்;டியெழுப்ப முடியும். 

நபிகளாரின் வழியில் உயரிய பண்பாடுகளைக் கையாள்தல் தொடர் - 07 றாபி எஸ் மப்றாஸ்

நபிகளாரின் வழியில் உயரிய பண்பாடுகளைக் கையாள்தல்
தொடர் - 07

றாபி எஸ் மப்றாஸ்

இஸ்லாம் பண்பாட்டின் மார்க்கமாகும்ளூ நபி (ஸல்) அவர்கள் பண்பாட்டின் உறைவிடமாகத் திகழ்ந்தார்கள்  'நிச்சயமாக நீர் சிறந்த நற்குணமுடையவராவீர்' ( அல் கலம் - 52) என அல்குர்ஆன் நபி (ஸல்) அவர்களை சிலாகித்து பேசுகிறது. நபி (ஸல்) அவர்களின் உயரிய பண்பாடுகளால் கவரப்பட்டு அன்று முதல் இன்று வரை சாரை சாரையாக இஸ்லாத்தின் பக்கம் மக்கள் வருகின்றனர்.

இஸ்லாத்தைப் பொறுத்தவரையில் பன்மைச் சமூகங்களுக்கு மத்தியில் சகவாழ்வு கட்டியெழுப்பப்பட உயரிய பண்பாட்டு விழுமியங்கள் பேணப்படுவது அவசியமாகும். அந்த வகையில்,  இலங்கை போன்ற பன்மைத்துவ சமூக அமைப்பு நபி (ஸல்) அவர்கள் மக்காவில் எதிர்க்கொண்ட சமூக அமைப்புக்கு ஒப்பானதகும். அத்தகைய சூழ்நிலையில், பொறுமை, மன்னிப்பு, சகிப்புத்தன்மை, விட்டுக்கொடுப்பு போன்ற நல்ல மனிதாபிமான பண்புகள் ஊடாகவே அன்றைய சமூகத்தை புடம் போட்டார்கள்.
'சங்கையான பண்பாடுகளை பூர்த்தி செய்வதற்காகவே நான் அனுப்பப்பட்டுள்ளேன்' என நபி(ஸல்) அவர்கள் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார்கள். ( அஹ்மத்)

நபி(ஸல்) அவர்கள் எப்போதும் பெறுமானங்களை அடிப்படையாக கொண்ட அணுகுமுறையே (value based approach) கையாண்டுள்ளார்கள். அவர்கள்; நெகிழ்வுப்போக்கான, இலகுவான, மென்மையான மனிதமான்புகளையும், உணர்வுகளையும் மதிக்க கூடிய மார்க்கமாகவே மக்கள் மத்தியி;ல் இஸ்லாத்தை அறிமுகம் செய்தார்கள்.
'ஒரு முறை ஒரு நாட்டுப்புறத்து அறபி வந்து மஸ்ஜிதுன் நபவியில் சிறுநீர் கழித்து விடுகிறார்ளூ அதனைக் கண்ட ஸஹாபாக்கள் அவரை ஆவேசத்துடன் அடிக்க முற்படுகின்றனர்ளூ அப்போது நபி (ஸல்) அவர்கள் 'அவரைத் தடுக்காதீர்கள்' என்று கூறிவிட்டு அவர் சிறுநீர் கழித்த பின்னர் அவரை அழைத்து சிறு உபதேசங்களை கூறி அனுப்பி விடுகிறார்கள்' (புஹாரி) இவ்வாறு எத்துணை பெரிய தவறுகளையும் மென்மையான முறைகளை கையாண்டு திருத்த கூடியவர்களாக நபியவர்கள் திகழ்ந்தார்கள்.
எனவே இலங்கை போன்ற பன்மைத்துவ சூழலில் மக்களிடத்தில் மென்மையான அணுகுமுறை, பொறுமை, மன்னிப்பு, சகிப்புத்தன்மை, விட்டுக்கொடுப்பு, உண்மை, நீதி, நேர்மை, உதவி செய்யும் மனப்பாங்கு, நல்ல விடயங்களில் ஒத்துழைக்கும் பக்குவம் போன்ற நற்பண்புகள் வளர்க்கப்பட வேண்டும்.
இவ்வாறான நற்பண்பாடுகள் குறித்த இனம், மதம் பற்றிய நல்லெண்ணத்தை வளர்த்து விடும். மேலும், இந்த நல்லெண்ணங்களின் வளர்ச்சியால் நாளை சகவாழ்வு நிச்சயம் கட்டியெழுப்பப்படும்.


இஸ்லாமியக் கண்ணோட்டத்தில் சட்டத்தை மதித்தலும் நீதி செலுத்தலும் தொடர் - 06 றாபி எஸ் மப்றாஸ்

இஸ்லாமியக் கண்ணோட்டத்தில் சட்டத்தை மதித்தலும் நீதி செலுத்தலும்
தொடர் - 06

றாபி எஸ் மப்றாஸ்

சகவாழ்வைக் கட்டியெழுப்ப இஸ்லாம் முன்வைக்கும் தீர்வுகளில் நீதிசெலுத்துதல் என்பது மிக முக்கியமான பண்பாகும். விருப்பு, வெறுப்பு, நட்பு, பகைமை பாராது, வேறுபாடுகளை நோக்காது நீதி யார் பக்கம் உள்ளதோ அதற்குச் சார்பாக குரல் கொடுக்க வேண்டும் என அல்குர்ஆன்  பணிக்கிறது. 
'ஒரு கூட்டத்தார் மீது நீங்கள் கொண்டுள்ள பகைமை நீதி செலுத்தாமல் இருப்பதற்கு உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செலுத்துங்கள் ஏனெனில் அது இறையச்சத்திற்கு நெருக்கமானது.' ( அல் மாயிதா - 08)
 
அதேபோல், அநீதி இழைத்தவன் யாராக இருந்தாலும் எவ்வித பாராபட்சமுமின்றி அதற்கெதிராக குரல் கொடுப்பதும் நபி (ஸல்) அவர்கள் ஊக்குவித்த ஒரு பண்பாகும். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் 'ஒரு அநியாயக்காரனைப் பார்த்து நீ அநியாயக்காரனே! எனச் சொல்ல எனது சமூகம் அஞ்சினால் அச்சமூகம் கைவிடப்படுகிறது.' (புஹாரி)
எனவே, அரசியல், பொருளாதாரம், சமூகம் என அனைத்து மட்டங்களிலும் நீதி செலுத்தப்பட வேண்டும் என்பது இஸ்லாத்தின் நிலைப்பாடாகும்.
சட்டத்தின் முன் அனைவரும் சமமாக கருதப்பட வேண்டும்ளூ உயர்ந்தவன், தாழ்ந்தவன், படித்தவன், பாமரன், நண்பன், பகைவன், பணக்காரன், ஏழை என எவ்வித பாராபட்சங்களும் இன்றி தவறிழைத்தவனுக்கான தண்டனையும் பாதிக்கப்பட்டவனுக்கு நியாயமும் வழங்கப்பட வேண்டும் என்பதில் இஸ்லாம் உறுதியாக உள்ளது. 
'ஒரு முறை ஒரு குலத்துப் பெண் திருடிய போது அவளுக்குச் சார்பாக சிலர் கருத்துத் தெரிவித்தனர். அப்போது கோபமடைந்த நபியவர்கள் 'என்னுடைய மகள் பாத்திமா திருடியிருந்தாலும் நாம் கையை வெட்டத் தயங்க மாட்டேன்.' என்று ஆவேசத்துடன் கூறினார்கள்.' (முத்தபகுன் அலைஹி) இவ்வாறு எவ்வித பாராபட்சமுமின்றி சட்டத்தின் முன் அனைவரும் சமமாக கருதப்படும் போது சகவாழ்வு மேலோங்குமென இஸ்லாம் கருதுகிறது.
அனைவரும் தத்தமது மத அனுஷ்டானங்களை பின்பற்றுவது போல நாட்டுச் சட்டங்களையும் மதித்து நடக்க வேண்டும். இன்றைய இலங்கைச் சூழலில் ஆயிரம் குற்றங்களை அடுக்கடுக்காய் செய்த அதிகார வர்க்கம் பஞ்சணை மெத்தைகளில் படுத்துறங்குவதையும் எக்குற்றமுமிழைக்காத அப்பாவிகள் சிறைக்கூண்டுகளுக்குள் சிக்கித் தவிப்பதையும் காணமுடியும். மேலும் சில சிறுபான்மைச் சகோதரர்கள் அரசியல் கைதிகளாக இன்றும் சிறையில் வாடுகிறார்கள். நீதித் துறையிலும் பாராபட்சம் காட்டப்படுகிறது. இஸ்லாத்தின் அடிப்படையில் பார்க்கும் போது இத்தகைய கறைகள் அகற்றப்பட  வேண்டும்.
இலங்கையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் படுகொலைகள், யுத்தக் குற்றங்கள், இனக்கலவரங்கள் என அனைத்துமே நீதியான விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும். அப்போதுதான் பாதிக்கப்பட்ட உள்ளங்களை குணப்படுத்த முடியும். சகவாழ்வுக்கான அடித்தளங்களை வலிமையாக்கிக்கொள்ள முடியும். மேலும், வீதியொழுங்குகளை பேணுதல், வியாபாரத்தில் பதுக்கல், மோசடி, கலப்படம் போன்றவற்றைத் தவிர்த்து வரிகளை முறையாகச் செலுத்த வேண்டும். இலஞ்சம், ஊழல் போன்றவற்றை அதிகாரிகளும் பொதுமக்களும் தவிர்த்துக் கொள்ள வேண்டும். 
இவ்வாறு சட்டத்தின் முன் அனைவரும் சமமாக மதிக்கப்பட்டு மக்களுக்கு மத்தியில் நீதிசெலுத்தப்படும் அதேவேளை மக்களும் இன மத பாரபட்சம் பாராமல் குறையேதும் கூறாமல் சட்டத்தை மதித்து நடக்கும் போது பன்மைச் சமூகங்கள்  மத்தியில்  சகவாழ்வு மலரும்.

இஸ்லாத்தின் பார்வையில் தேசப்பற்றும் தேசம் தழுவிய பணிகளும் -தொடர்-05- றாபி எஸ் மப்றாஸ்

இஸ்லாத்தின் பார்வையில் தேசப்பற்றும் தேசம் தழுவிய பணிகளும் -தொடர்-05

றாபி எஸ் மப்றாஸ்

இஸ்லாம் தாய் நாட்டின் மீதான பற்றை வலியுறுத்துகிறது. நபி (ஸல்) அவர்கள் தாய்நாடான மக்காவின் மீதும் வாழ்ந்த நாடான மதீனாவின் மீதும் அதிகளவான பற்றுக்கொண்டிருந்தார்கள் என்பதை நபி (ஸல்) அவர்கள் ஹிஜ்ரத் பயணத்தின் போது மக்கா நகரைப் பார்த்து கூறிய வார்த்தைகள் பறைசாற்றுகின்றன. 
'ஓ மக்காவே! தேசங்களில் நீ மிகவும் சிறந்தது. எனக்கு மிகவும் விருப்பமான தேசமும் நீதான். என்னுடைய சமூகம் உன்னைவிட்டும் வெளியேற்றியிருக்காவிட்டால் உன்னைத்தவிர வேறெங்கும் நான் வசித்திருக்கமாட்டேன்.' ( திர்மிதி - 3926)
அதேபோல் மதீனாவில் வாழும்போது நபி (ஸல்) அவர்கள் பின்வருமாறு பிரார்த்திப்பவர்களாக இருந்தார்கள். 'யா அல்லாஹ் எங்களுக்கு மக்காவை விருப்பமாக்கியது போன்று அல்லது அதைவிட அதிகமாக மதீனாவை விருப்பத்துக்குரிய தேசமாக மாற்றிவிடுவாயாக.'  (புஹாரி - 6011)

எனவே, நபி (ஸல்) அவர்கள் பல்லினங்கள் பலமதங்கள், பலகோத்திரங்கள் குறித்த தேசத்தில் வாழ்ந்தபோதும் அவ்வேறுபாடுகளை அங்கீகரித்து அத்தேசத்தின் மீதும் பற்றுக் கொண்டார்கள். 

இன்றைய இஸ்லாமிய சிந்தனையாளர்கள் பன்மைச் சமூகச் சூழலில் சகவாழ்வு மலர 'பிக்ஹூல் முவாதனா'  என்ற சிந்தனையை முன்வைக்கின்றனர். அதாதவது பன்மைச் சமூகங்களில் வாழும் தனிநபரோ அல்லது குழுக்களோ இன மத குல பேதங்கள் கடந்து ஒரே நாட்டின் மக்கள் என்ற வகையில் அரசியல் பொருளாதார சமூக உரிமைகளுடன் செயற்படுவதையே இச் சிந்தனை குறித்து நிற்கிறது. ( நஹ்வ பிக்ஹின் ஜதீத் லில் அகல்லிய்யாத், ஜமாலுத்தீன் அதிய்யா முஹம்மத், முதற் பதிப்பு – 2003, தாருஸ் ஸலாம், கெய்ரோ, பக்: 80) 

இஸ்லாம் தேசத்தின் மீது பற்றுக்கொள்வதை ஊக்குவிப்பதோடு நின்று விடாமல் இன, மத, மொழி பேதம் பாராது அனைவருக்கும் உதவிகள் வழங்குமாறும் தூண்டுகிறது. வறுமை, நோய், கஷ்டம், கடன் போன்ற அத்தியவசியத் தேவைகளின்போது வேறுபாடுகளை மறந்து உதவிசெய்யுமாறு இஸ்லாம் பணிக்கிறது. 
'அவர்களுக்கு (முஸ்லிமல்லாதோருக்கு) நீங்கள் உபகாரம் செய்வதற்கும் நீதிசெலுத்துவதற்கும் அல்லாஹ் தடுக்கவில்லை.' (அல் மும்தஹினா - 08) 
இந்த வசனத்தை விளக்கும்போது 'இமாம் கராபி' முஸ்லிமல்லாதோரில் வாழும் ஏழைகளின் தேவைகளை பூர்த்தி செய்தல், பசித்தவர்களுக்கு உணவளித்தல், ஆடையற்றோருக்கு ஆடையளித்தல், அவர்களையும் அவர்களது சொத்துக்களையும் பாதுகாத்தல் என்று கூறுகிறார். (   பன்மைச் சமூகத்தில் சகவாழ்வும் தனித்துவமும், றஊப் ஸெய்ன், முதற் பதிப்பு - ஜூலை,2014, சமூக விஞ்ஞானங்களுக்கான இப்னு கல்தூன் ஆய்வகம், பக்: 17)
'உனது சகோதரனின் முகத்தைப் பார்த்து  புன்முறுவல் பூப்பதும் ஸதகாவாகும், வழிதவறித் தடுமாறுகின்ற ஒருவருக்கு வழிகாட்டுவதும் ஸதகாவாகும், பாதையிலுள்ள மனிதனுக்கு தீங்கு விழைவிக்கும் கற்களையும் முட்களையும் அகற்றுவதும் ஸதகாவாகும், உனது வாளியினால் உனது சகோதரனின் வாளிக்கு நீரூற்றுவதும் ஸதகாவாகும்.' ( திர்மிதி)

இவ்வாறு பல ஹதீஸ்கள் இன, மத, குல வேறுபாடுகளின்றி மனித சகோதரத்துவத்தை மையப்படுத்தி எமது உதவிகள் அமைய வேண்டும் என இஸ்லாம் கூறுகின்றது.
எனவே, சிங்களவர்,  தமிழர், முஸ்லிம் என்ற இன, மத வேறுபாடுகளுக்கப்பால் 'இலங்கையர்கள்' என்ற உணர்வு மேலோங்க வேண்டும். டுடுசுஊயின் சகவாழ்வுக்கான பரிந்துரைகளில் நாட்டு மக்கள் ஒவ்வொருவரும் இரட்டை அடையாளங்களைக் (Double Identity) கொண்டவராக அதாவது சிங்கள இலங்கையன், தமிழ் இலஙகையன், முஸ்லிம் இலங்கையன் என சொந்த அடையாளங்களைப் பேணும் அதே வேளை நாட்டின் ஒருமைப்பாட்டுக்கும் ஒத்துழைக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. (Lesson Leaent & Reconciliation Commision (LLRC
 வெள்ளம், சுனாமி, சூறாவளி, தொற்றுநோய்ப் பரவல் போன்ற இயற்கை அனர்த்தங்களின்போது மனிதாபிமான உதவிகளை எமது இனங்களுக்குள்ளாலும் மதங்களுக்குள்ளாலும் சுருக்கிவிடாது பாதிக்கப்பட்டோருக்கு உதவ வேண்டும். அதேபோல் இஸ்லாமிய நிறுவனங்கள் கிணறு, மலசல கூடம், உலர் உணவு வழங்கும் நிகழ்ச்சித்திட்டம் போன்ற அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கும்போது கண்டிப்பாக பிற மதத்தாரை உள்வாங்க வேண்டும். இவ்வாறு ஒவ்வொரு சமூகமும் இலங்கையர் என்ற உணர்வோடு தேசம் தழுவிய ரீதியில் மனிதாபிமான பணிகள் மேற்கொள்ளப்படுமாயின் இப்பன்மைச் சமூகங்கள் நிறைந்த நாட்;டில் சகவாழ்வு சாத்தியமாகும்.

இஸ்லாம் சொல்லும் கொள்கைச் சுதந்திரமும் மத சகிப்புத்தன்மையும் - தொடர்-04 றாபி எஸ் மப்றாஸ்

இஸ்லாம் சொல்லும் கொள்கைச் சுதந்திரமும் மத சகிப்புத்தன்மையும் - தொடர்-04

றாபி எஸ் மப்றாஸ்

ஒவ்வொரு மனிதனுக்கும் தான் சார்ந்த கொள்கை மீது பற்று இருக்கலாம். ஆனால், வெறியும் வைராக்கியமும் இருந்து விடக்கூடாது. இன்று உலகில் இடம் பெறும் இன மதக் கலவரங்களுனக்கு இத்தகைய வெறியே அடித்தளமாக அமைந்திருக்கிறது. ஆனால், இஸ்லாம் ஒவ்வொரு மனிதருக்கும் தான் விரும்பும் மதத்தை, கொள்கையை பின்பற்றும் சுதந்திரம் (குசநநனழஅ ழக நுஒpசநளளழைn) உண்டு என்பதை ஏற்றுக்கொள்கிறது. 'மார்க்கத்தில் நிர்ப்பந்தமில்லை.' (அல் பகறா - 256) என்றும், 'மக்கள் விசுவாசிகளாக மாற நீர் அவர்களை நிர்ப்பந்திக்கிறீரா' (யூனுஸ் - 99) என்றும் அல்குர்ஆன் கூறுகின்றது.
ஒரு இனம் அல்லது மதம் தமது கொள்கைகளை அழகிய முறையில் பண்பாடாக மக்களுக்கு மத்தியில் எடுத்துரைப்பதில் தவறில்லைளூ ஆனால், ஒவ்வொருவரும் தத்தமது கொள்கையையும் மதத்தையும் எவ்வித தடையுமின்றிப் பின்பற்ற பூரண சுதந்திரம் வழங்கப்பட வேண்டும் என்பதை அல்குர்ஆன், 'உங்களுக்கு உங்களது மார்க்கம், எனக்கு எனது மார்க்கம்.' ( காபிரூன் - 6) என்ற வசனத்தின் மூலம் வலியுறுத்துகின்றது.

எனவே, எமது இலங்கைச் சூழலில் பௌத்தம், இந்து, இஸ்லாம், கிறிஸ்தவம் போன்ற பல மதங்கள் காணப்படுகின்றன. இந்த ஒவ்வொரு மதமும் மற்றைய மதங்களின் இருப்பையும் அதன் பண்பாட்டு விழுமியங்களையும் அனுசரித்து நடக்க வேண்டும். பிற மத அனுஷ்டானங்களை கேவலப்படுத்துவதும் அசிங்கப்படுத்துவதும் துடைத்தெறியப்பட வேண்டும்.
இஸ்லாம் எடுத்தியம்பும் இத்;தகைய பண்புகளில்லாதபோது நாட்டின் சகவாழ்வுக்கு அபரிதமான பாதிப்பு ஏற்படும். 2014ம் ஆண்டு நிகழ்ந்த பேருவளைக் கலவரம், தற்காலத்தில் பேசப்படும் அல்குர்ஆன் அவமதிப்பு வழக்கு என்பன இவற்றுக்கு சான்றாகக் கூறலாம்.
எனவே, பௌத்த, இந்து, இஸ்லாம், கிறிஸ்தவம் என எம்மதத்தைப் பின்பற்றுபவர்களாயினும் பிற மதங்களை காயப்படுத்தாது, மத அனுஷ்டானங்களுக்கு  இடையூறு விளைவிக்காது தமது கிரிகைகளே மேற்கொள்ள வேண்டும். இஸ்லாம் சொல்லும் இத்தகைய கொள்கைச் சுதந்திரமும் மத சகிப்புத்தன்மையும் பேணப்படுமானால் இந்நாட்டில் நிச்சயம் சகவாழ்வு கொடிகட்டிப்பறக்கும் என்பதில் ஐயமில்லை.
மதச் சகிப்புத்தன்மைக்கு அப்பால் பிற மதங்களையும் கலாசார விழுமியங்களையும் மதிக்க வேண்டுமென இஸ்லாம் வலியுறுத்துகிறது.
'அல்லாஹ் அல்லாதவர்களை வணங்குபவர்களை நீங்கள் ஏச வேண்டாம். அவ்வாறு நீங்கள் செய்தால் அவர்கள் பதிலுக்கு அத்துமீறி எவ்வித அறிவுமின்றி அல்லாஹ்வை ஏசுவார்கள்.'  (அல்-மும்தஹினா-8)
அதுமட்டுமல்லாது, யுத்தங்களின்போதும் பிறமதத் தலைவர்கள், பெண்கள், குழந்தைகள் கொல்லப்படக்கூடாது என்றும் எதிர் நாட்டு இயற்கை வளங்கள், மத ஆலயங்கள் அழிக்கப்படக்கூடாது என்றும் முஸ்லிம் தலைவர்கள் கட்டளையிட்டதை வரலாறு மறக்கவில்லை.
மேலும் நூற்றுக்கணக்கான வருடங்கள் முஸ்லிம்களின் ஆட்சியிலிருந்த ஸ்பெய்ன், இந்தியா போன்ற நாடுகளில் பிற மதத்தவர்களின் எண்ணிக்கையும், பிற மத ஆலயங்களின் அழியாத அடையாளங்களும் மத சகிப்புத்தன்மைக்கு இஸ்லாம் விட்டுச் சென்ற நடைமுறைச் சான்றுகளாகும்.

இஸ்லாத்தின் பார்வையில் மனித சமத்துவமும் சகோதரத்துவமும் - தொடர் - 03 - றாபி எஸ் மப்றாஸ்

இஸ்லாத்தின் பார்வையில் மனித சமத்துவமும் சகோதரத்துவமும் - தொடர் -03


றாபி எஸ் மப்றாஸ்

இலங்கை போன்ற பன்மைச் சமூகங்கள் வாழும் நாடுகளில் சகவாழ்வைக் கட்டியெழுப்புவதற்காக இஸ்லாம் முன்வைத்துள்ள அடிப்படைகளையும் நடைமுறைகளையும் ஆராய்ந்து பார்ப்பது பொருத்தமானதொன்றாகும்.

மனித சமத்துவமும் சகோதரத்துவமும்

இலங்கைப் போன்ற பன்மைத்துவ சமூகங்கங்களில் சகவாழ்வை கட்டியெழுப்புவதற்கு இஸ்லாம் சொல்லும் மனித சமத்துவம் (Human equality), மனித சகோதரத்துவம் (Human solidarity) போன்ற சிந்தனைகளை மக்கள் மத்தியில் விதைக்க வேண்டும்.
உண்மையில், இஸ்லாம் மனிதர்களை அதி சிறந்த படைப்பாக கருதுகிறது. 'நிச்சயமாக நாம் ஆதமுடைய மக்கள் அனைவரையும் கண்ணியப்படுத்தினோம். அவர்களை தரையிலும் கடலிலும் சுமந்தோம்ளூ மிகவும் நல்லவற்றிலிருந்து அவர்களுக்கு ரிஸ்க் அளித்தோம்ளூ நாம் படைத்த ஏனைய படைப்புக்களில் அதிகமானவற்றை விட மனிதர்களுக்கு விஷேட அம்சங்களை கொடுத்து சிறப்பித்தோம்' ( இஸ்ராயீ;ல் - 70)
இவ்வாறு மனித இனத்தை கண்ணியப்படுத்தியது மாத்திரமில்லாது மனிதர்களை மனிதர்களாக மட்டுமே இஸ்லாம் பார்க்கிறது. இனம், மதம், நிறம், குலம், கோத்திரம் போன்ற பேதங்களை கொண்டு மனிதர்களின் உயர்வு, தாழ்வை இஸ்லாம் தீர்மானிப்பது கிடையாது. மனிதர்கள் அனைவரும் எல்லா வகையிலும் சமமானவர்கள் என்பது இஸ்லாத்தின் உறுதியான நிலைப்பாடாகும்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் 'அறிந்துக் கொள்ளுங்கள், ஒரு அஜமியை விட அரபிக்கும், ஒரு அறபியை விட அஜமியும் மேலானவர்கள் அல்ல, ஒரு கறுப்பனை விட வெள்ளையனும் ஒரு வெள்ளையனை விட கறுப்பனும் மேலானவர்கள் அல்ல.' (திர்மிதி - 3270)

இஸ்லாம் இவ்வாறு இனவெறியையும், நிற வெறியையும் முற்றாக நிராகரிக்கிறது. மேலும், அனைவரையும் மனிதன் என்ற பொதுத்தளத்தில் வைத்து நோக்குகிறது. நபி (ஸல்) அவர்களது சபையில் அபிஸீனிய நீக்ரோவான பிலாலும் (ரழி), பாரசீகத்தை சேர்ந்த ஸல்மான் (ரழி), ரோம் தேச சுஹைப் (ரழி) அனைவரும் சரிசமமாக அமர்ந்து கருத்துக்கள் பரிமாறும் மனித சமத்துவம் பேணப்பட்டதை வரலாறு பதிவுசெய்கிறது. ( நஹ்வ பிக்ஹின் ஜதீத் லில் அகல்லிய்யாத், ஜமாலுத்தீன் அதிய்யா முஹம்மத், முதற் பதிப்பு – 2003, தாருஸ் ஸலாம், கெய்ரோ, பக்: 80)

அது மட்டுமல்லாது, மனிதர்களை மதத்தின் பெயரால் பிரிப்பதை இஸ்லாம் ஒரு போதும் அங்கிகரித்தது கிடையாது. மேலும் மனித சமத்துவத்தை பேணும் அதே வேளை மனிதர்கள் அனைவரும் சகோதரர்கள் ஆதம் (அலை), ஹவ்வா (அலை) ஒரே மூலத்திலிருந்து வந்தவர்கள் எனவும் இஸ்லாம் கருதுகிறது.

'மனிதர்களே! உங்களது இரட்சகனை பயந்துக் கொள்ளுங்கள் அவன் தான் உங்களை ஒரே ஆத்மாவிலிருந்து படைத்தான். பின்னர் அவர்கள் இருவரிலும் இருந்து அதிகமான ஆண்களையும் பெண்களையும் படைத்தான்.' ( அந்நிஸா - 02)

எனவே, மனிதர்கள் அனைவரும் சகோதரத்துவ வாஞ்சையோடு பழக வேண்டும் என்பதே இஸ்லாத்தின் அவாவாகும். மேலும், நபி (ஸல்) அவர்கள் ஐவேளை தொழுகைகளைத் தொடர்ந்து தமது பிரார்தனைகளில் 'இறைவா! மனிதர்கள் அனைவரும் சகோதரர்கள் என சாட்சி பகர்கிறேன்' என்று அடிக்கடி கூறுபவர்களாக இருந்தார்கள்.  (அஹ்மத், அபூதாவூத்)

அல்லாஹ்வை நெருங்கக்கூடிய ஆயுதமான பிரார்த்தனைகளின் மூலம் மனித சகோதரத்துவத்தின் முக்கியத்துவத்தை நபி (ஸல்) அவர்கள் எடுத்தியம்பியருப்பதோடு எவ்வித அரசியல் நோக்களுக்காகவும் அன்றி தூய்மையாக சொல்லப்பட்ட ஒரு பிரார்தனையாகவுமே இது நோக்கப்படுகிறது.

எனவே, இதனடிப்படையில் இலங்கைச் சூழலில் சிங்கள தமிழ் முஸ்லிம் போன்ற இன மத வேறுபாடுகளை களைந்து மனிதன் என்ற பொதுத்தளத்தில் ஒன்று பட வேண்டும். பெரும்பான்மை, சிறுபான்மை என்ற பாகுபாட்டினால் அடக்குமுறைகள் இடம்பெற ஒரு போதும் இடமளிக்கப்படக் கூடாது. மேலும், இனங்களுக்கிடையில் உயர்வு, தாழ்வு போன்ற வேற்றுமைகள் பேணப்படுவதையோ இனங்கள் தமக்குள்ளே வகுப்பு வாத வேறுபாடுகளை வளர்த்துக் கொள்வதையோ அனுமதிக்கக் கூடாதுளூ மாற்றமாக மனித சமத்துவம் பேணப்பட வேண்டும் என இஸ்லாம் விரும்புகிறது.

அரசியல், பொருளாதாரம், கல்வி என எல்லாத் துறைகளிலும் சமத்துவம் பேணப்பட வேண்டும். அரசியல் தீர்வுகளின் போது யாப்பு சீர்திருத்தங்களின் போதும் பல்கலைக்கழக அனுமதிகளின் போதும் சிறுபான்மை இனங்கள் ஓரங்கட்டப்படக் கூடாது. அது மட்டுமல்லாது இன மத கலாச்சார வேறுபாடுகளுக்கு அப்பால்; அனைவரும் சகோதரர்கள் என்ற உணர்வுடன் ஒன்று பட வேண்டும் என இஸ்லாம் அழைக்கிறது. எனவே, இஸ்லாத்தின் பார்வையில் இலங்கையில் சகவாழ்வு கட்டியெழுப்பப்பட மனித சமத்துவமும் சகோதரரத்துவமும் பேணப்பட வேண்டும்.

(2016ம் ஆண்டு இலங்கைத் தென்கிழக்குப் பல்கலைக்கழகங்களினால் நடாத்தப்பட்ட அகில இலங்கைப் பல்கலைக்கழகங்களுக்கிடையிலான ஆய்வுக்கட்டுரைப் போட்டியில் பணப்பரிசில் பெற்ற கட்டுரை)